உள்ளாட்சி தேர்தலுக்கு சீக்ரெட்டாக தயாராகும் திமுக - பதவிகளை கொத்தாக அள்ள ஸ்டாலின் வியூகம்
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான பதவிகளை கொத்தாக அள்ள அதிரடியாக திமுக தயாராகி வருவதாக அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. வேட்பாளர்கள் தேர்வு முதல் வாக்காளர்களை கவர வைட்டமின் 'ப'வை களமிறக்குவது வரை அறிவாலய நிர்வாகிகளை மட்டுமே நம்பி களத்தில் இறங்கப் போகிறாராம் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின்.
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன . கடந்த முறையைப் போல் அல்லாமல், ' கவுன்சிலர்களே மேயரை, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களைத் தேர்வு செய்யும்' மசோதாவைக் கொண்டு வந்தார் முதலமைச்சர் ஜெயலலிதா. இதற்கு எதிராக தி.மு.க தரப்பில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடக்க உள்ளது. ஆளும்கட்சியான அதிமுக, எம்பி தேர்தலைப்போல் பெரிய வெற்றி பெற தேர்தல் வியூகம் வகுத்துள்ளது. அதற்காக அக்கட்சி மாவட்டங்கள்தோறும் உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டங்களை நடத்திக்கொண்டு இருக்கின்றது. இக்கூட்டங்களில் அப்பகுதி அமைச்சர், எம்பி-க்கள் கலந்து கொண்டு நிர்வாகிகளை, கட்சி உறுப்பினர்களை அழைத்து ஆலோசனை வழங்குகின்றனர்.
செல்வாக்கு யாருக்கு?
அதிமுக வில் போட்டியிடும் வேட்பாளர் கள், அப்பகுதியில் மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்களாகவும், தேர்தல் செலவை பார்த்துக் கொள்பவர்களாகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், கட்சித் தலைமை எந்த நேரத்திலும் எந்த முடிவும் எடுக்கலாம் என்பதால் கட்சிக்காக நீண்ட நாள் உழைத்த அடிமட்ட நிர்வாகிகளும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
திமுகவின் அதிரடி திட்டம்
உள்ளாட்சித் தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால் திமுக தலைமை ஆளும்கட்சிக்கு சட்டசபைத் தேர்தலைப்போல் கடும் போட்டியை கொடுத்து கூடுதல் இடங்களைக் கைப்பற்ற வியூகம் வகுத்துள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற மாவட்டங்கள், குறைந்த வாக்கு சதவீதத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த பகுதிகளில் உள்ளாட்சிப் பதவிகளை கைப்பற்ற அதிரடி முடிவு எடுத்துள்ளது.
ஸ்டாலின் வியூகம்
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் புதிய யுத்தியைக் கடைபிடித்து கூடுதல் வெற்றியைப் பெறுவதற்கான ஆலோசனைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறாராம் தி.மு.க பொருளாளர் ஸ்டாலின். ' ஆளுங்கட்சியின் அசுர பலத்திற்கு எதிராக, அனைத்து உள்ளாட்சி இடங்களையும் கைப்பற்றினால் மட்டுமே, மக்கள் நம்பக்கம் இருக்கின்றனர் என்பதை நிலைநாட்ட முடியும் என போகும் இடங்களில் எல்லாம் நிர்வாகிகளிடம் பேசி வருகிறாராம்.
மா.செ.க்கள் சிபாரிசுக்கு நோ
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்போதும், மாவட்ட, ஒன்றிய, நகர செயலாளர்கள் கொடுக்கும் பட்டியலில் உள்ளவர்களுக்கே கவுன்சிலர் சீட் வழங்கப்பட்டு வந்தது. இந்தமுறை மாவட்ட, ஒன்றிய, நகர செயலாளர்கள் கொடுக்கும் பட்டியலை கண்டுகொள்ளப் போவது இல்லையாம்.
மாவட்டங்களில் இருந்து வரும் பரிந்துரைக் கடிதங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டாம்' என உறுதியாகக் கூறிவிட்டாராம் ஸ்டாலின். இதனால் மாவட்ட செயலாளர்கள் மத்தியில் சில அதிருப்திகளும் ஏற்பட்டுள்ளன.
ரகசிய குழு தேர்வு
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக் கூடிய தகுதிவாய்ந்த வேட்பாளர்களை, அறிவாலயம் நியமிக்க இருக்கும் ரகசியக் குழுவே தேர்வு செய்யும். அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள பெயர்களை, பொருளாளர் ஸ்டாலின் முடிவு செய்து அறிவிப்பாராம்.
பதவிகளை கைப்பற்ற வியூகம்
சென்னையில் பத்து எம்.எல்.ஏக்கள் எங்களுக்கு உள்ளனர். சென்னை மாநகராட்சி தி.மு.க வசம் வருவதற்கே வாய்ப்பு அதிகம். திருநெல்வேலியில் இரண்டு எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதைப் போலவே, திமுக உறுப்பினர்கள் அதிகம் வெற்றி பெற்ற சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள மாநகராட்சி, நகராட்சி இடங்களை தி.மு.க வசமாக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் வேட்பாளர்களை தேர்வு செய்யப் போகிறாராம் ஸ்டாலின்.
தேர்தல் பொறுப்பாளர்கள்
இரண்டு சட்டசபைத் தொகுதிக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட இருக்கிறார். இதுவரையில் கடைபிடித்து வந்த நடைமுறைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட யுத்தியாக இது இருக்கப் போகிறது. அதோடு உள்ளாட்சித் தேர்தலில் போட் டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுக்கான 75 சதவீத பணத்தை திமுக மேலிடமே வழங்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
நிதி கொடுக்கும் கட்சி
மக்கள் செல்வாக்கு பெற்ற, கட்சிக்கு விசு வாசமுள்ள, தகுதியான நபர்களை தேர்வு செய்வதோடு, கட்சியே நிதி கொடுத்தால் நிர்வாகிகள் தைரியமாக போட்டி யிட முன்வருவார்கள் திமுக மேலிடம் கருதுகிறது. தேர்தல் செலவை கண்காணிக்கவும், தேர்தல் பணிகளை ஒருங்கிணைக் கவும், திமுக மேலிடத்தில் நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளதாகக் கூறப் படுகிறது. இதுநாள் வரை கட்சி நிதி வாங்கியது போய் இப்போது கட்சித்தலைமையே நிதி கொடுப்பதால் திமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனராம். உள்ளாட்சி தேர்தலில் திமுக பலமான போட்டி கொடுக்கும் என்பதால் அதிமுக வட்டாரம் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.