மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை: மத்திய அரசை கண்டித்து திமுக இன்று ஆர்ப்பாட்டம்
மாட்டிறைச்சி தடைக்கு எதிராக ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சென்னை: மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை கண்டித்து இன்று சென்னையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடு, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவது தடை செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மத்திய அரசின் இந்த திட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும் என்று கோரி போராட்டங்களும் நடந்து வருகிறது. தமிழகம், கேரளா உள்ளிட்ட பல இடங்களில் மத்திய அரசுக்கு எதிராக மாட்டுக்கறி விருந்துகள் நடைபெற்று வருகின்றன.
கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி மாநில முதல்வர்கள் இந்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என உறுதியாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த உத்தரவு ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும் அவர்கள் கூறிவருகின்றனர். ஆனால் தமிழக இந்த விவகாரத்தில் மெளனம் காத்து வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காலை 9 மணிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.