சட்டசபை வன்முறையை கண்டித்து.. தமிழகம் முழுவதும் திமுக உண்ணாவிரதப் போராட்டம்
சட்டசபையில் திமுகவினர் தாக்கப்பட்டது தொடர்பாக இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை: சென்னை, திருச்சி, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட நகரங்களில் திமுக உண்ணாவிரதப் போராட்டத்தை புதன்கிழமை நடத்தி வருகிறது.
சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது பிப்ரவரி 18-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார். இதனால் சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது.

சட்டசபைக்குள் தர்ணா போராட்டம் நடத்திய ஸ்டாலின் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். அப்போது ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்பட்டது. இதையடுத்து கிழிந்த சட்டையுடன் ஆளுநர் வித்யாசகர் ராவை நேரில் சந்தித்து ஸ்டாலின் முறையிட்டார்.
இது தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதில், சட்டசபை சம்பவம் தொடர்பாகவும் ஜனாதிபதியை சந்தித்து புகார் கொடுப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இந்தப் போராட்டம் தொடங்கியது. திருச்சி உழவர் சந்தையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று வருகிறார்.
சென்னையில் வள்ளுவர் கோட்டம், ஆதம்பாக்கம், மின்ட் உள்ளிட்ட 4 பகுதிகளிலும், காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட பகுதிகளிலும் அறப் போராட்டம் நடைபெற்று வருகிறது. வள்ளுவர் கோட்டத்தில் க.அன்பழகன் தலைமையிலும், ஆதம்பாக்கத்தில் மா.சுப்பிரமணியன் தலைமையிலும், மின்ட் பகுதியில் வி.கே. சேகர் தலைமையிலும் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.
இந்த உண்ணாவிரதத்தில் பல்வேறு மாணவர்கள், விவசாய சங்கத்தினர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட கட்சி சாராதவர்களும் ஸ்டாலினுக்கு ஆதரவாக உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications