வழக்கம் போல சட்டசபையில் இருந்து தி.மு.க, காங், பு.தமிழகம் வெளிநடப்பு- வெளியேற்றம்!!
சென்னை: தமிழக சட்டசபையில் இருந்து தி.மு.க, காங்கிரஸ், புதிய தமிழக கட்சிகள் வெளிநடப்பு செய்தன. மேலும் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தை நீக்கக் கோரி சபாநாயகரை முற்றுகையிட்டதால் தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றவும் செய்யப்பட்டனர்.
தமிழக சட்டசபையில் இந்த ஆண்டுக்கான 2வது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மாணவர்கள் பிரச்னை குறித்து பேச தி.மு.க.வினர் வாய்ப்பு கோரினர்.
ஆனால் ஆளுநர் உரை மீது மட்டும் கேள்வி எழுப்ப வேண்டும் என சபாநயகர் தனபால் அறிவுறுத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உறுப்பினர்கள் மு.க. ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

தி.மு.கவைத் தொடர்ந்து புதிய தமிழகம், காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
பொள்ளாச்சி ஜெயராமனுக்கு எதிர்ப்பு
இந்த வெளிநடப்புக்குப் பின்னர் மீண்டும் சபைக்கு தி.மு.க. உறுப்பினர்கள் வந்தனர். அப்போது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் முன்மொழிந்து பேசினார்.
அவர் தனது உரையில், ஸ்ரீரங்கம் தொகுதியில் தி.மு.க. டெபாசிட் இழந்தது என்று கூறினார். பொள்ளாச்சி ஜெயராமன் கூறிய இந்த வார்த்தையை நீக்க வேண்டும் என்று தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து சட்டசபையில் ஜெ. அன்பழகன் கோமாளியாக செயல்படுவதாக பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.
உடனே தி.மு.க. உறுப்பினர்கள், கோமாளி என்ற வார்த்தையை சபைக் குறிப்பில் இருந்து நீக்குமாறு முழக்கங்கள் எழுப்பினர். ஆனால், கோமாளி என்ற வார்த்தை நீக்கப்படுவதற்கான பட்டியலில் இல்லை என்று சபாநாயகர் விளக்கம் அளித்தார்.
இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த தி.மு.க.வினர் சபாநாயகர் இருக்கை முன் கூடி முழக்கங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சபையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications