முதல்வர் பதவியில் ஓபிஎஸ் தான் தொடர வேண்டும்.. துரைமுருகன் திடீர் பேச்சால் அவையில் கலகலப்பு
தமிழக முதல்வராக 5 ஆண்டுகள் ஓ.பன்னீர்செல்வம் தான் இருக்க வேண்டும் என துரைமுருகன் வாழ்த்தி பேசியது சட்டசபையில் கலகலப்பை ஏற்படுத்தியது.
சென்னை: முதல்வர் பதவியில் 5 ஆண்டுகள் பன்னீர்செல்வம் தான் தொடர வேண்டும் என திமுக எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேசினார். பின்னர் பேசிய எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், முதல்வர் பன்னீர்செல்வம் 5 ஆண்டுகள் முதல்வராக தொடர வேண்டும் எனவும் தங்களால் எந்த பிரச்சனையும் வராது எனவும் கூறினார்.
மேலும் முதல்வருக்கு தேவையான சக்திகளையும் தாங்கள் தர தயாராக இருப்பதாகவும் துரைமுருகன் கூறினார். இதனால் அவையில் கலகலப்பு ஏற்பட்டதுடன், சிரிப்பலையும் தொடர்ந்தது. பின்னர் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி, தற்போது எளிமையான முதல்வர் கிடைத்துள்ளதாகவும், சட்டப்பேரவையில் தாங்கள் எதிர்பார்த்த ஜனநாயகம் தற்போது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்டார். இந்த நிலை தொடர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேற்றைய சட்டப்பேரவை நிகழ்வில் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பாராட்டும், புகழாரமும் சூட்டியதால் அவையில் கலகலப்பு ஏற்பட்டது. அதேநேரம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரை துரைமுருகன் கூறியதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் எழுந்து எதிர்ப்பு தெரிவிக்க, அதிமுகவினரும் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்புக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நடந்தது. அமைச்சர் சி.வி.சண்முகம், திமுக உறுப்பினர் சேகர்பாபு ஆகியோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக இரு கட்சிகளின் உறுப்பினர்களும் குரல் கொடுத்ததால் அவையில் கடும் அமளி நிலவியது. சிறிது நேர அமளிக்குப் பின், பேரவைத் தலைவர் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்தார்.