டி.ஆர்.பாலுவுக்கு இதய ஆபரேஷன் முடிந்தது.. பார்வையாளர்கள் சந்திப்பதைத் தவிர்க்குமாறு திமுக கோரிக்கை
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்திருப்பதாகவும், அவர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்றம், அவரை மருத்துவமனையில் சந்தித்து யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று திமுக தலைமைக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், நாடாளுமன்ற முன்னாள் கழக உறுப்பினருமான டி.ஆர்.பாலுவுக்கு திடீரென இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்த நிலையில், கலைஞரின் இதய அறுவை சிகிச்சை வல்லுநர் பட்டாச்சாரியா மற்றும் அவரது குழுவினருடன் ஆலோசனை நடத்திய பின், டி.ஆர்.பாலுவுக்கு வெற்றிகரமாக சிகிச்சை நடந்தேற கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின், முரசொலி செல்வம் ஆகியோரை மும்பைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்படி மும்பை பிரிச்கேண்டி மருத்துவ மனையில் கடந்த 7ம் தேதி அன்று டி.ஆர்.பாலு அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்கு முன்னும் ( 8முதல் 9ம் தேதி வரை ) ஸ்டாலினும், முரசொலி செல்வமும் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து அறுவை சிகிச்சைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முன் நின்று கவனித்துக்கொண்டனர்.
அறுவை சிகிச்சை முடிந்த பின்பு, மருத்துவர் பட்டாச்சாரியா மற்றும் அவர்களின் குழுவினர்களிடம் மருத்துவ சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என உறுதி செய்த பிறகு, திமுகவின் சார்பிலும், டி.ஆர்.பாலு மற்றும் அவர் குடும்பத்தினர் சார்பிலும் பட்டாச்சாரியா மற்றும் அவர்தம் குழுவினருக்கு நன்றி தெரிவித்த பின் சென்னை திரும்பினார் ஸ்டாலின்.
டி.ஆர்.பாலுவுக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த பிறகு முன்னாள் மகாராஷ்டிர முதல்வர்கள் சரத்பவார், சுசில்குமார் ஷிண்டே ஆகியோர் டி.ஆர்.பாலுவையும் அவரது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்தும், தொலைபேசி வாயிலாகவும் நலம் விசாரித்தனர்.
அதுபோலவே தமிழர் தலைவர் கி.வீரமணி, தமிழக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினரும் திமுக கொறடாவுமான சக்ரபாணி ஆகியோரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மீனம்பாக்கம் மீ.அ.வைத்தியலிங்கம், நக்கீரன் காமராஜ், பேராசிரியர் கிருஷ்ணசாமி, அய்யாவு, ஜி.நடராஜன், திருவல்லிக்கேணி பகுதி முன்னாள் செயலாளர் செழியன், கழக வழக்கறிஞர் அருண், பச்சையப்பன், சி.கோ.பெருமாள் (காங்.,), பேராவூரணி பழனிவேல், நலம் விசாரித்தனர்.
அதனை தொடர்ந்து கழக பொதுச்செயலாளர் பேராசிரியர், கனிமொழி எம்.பி., கழக துணைப் பொதுச்செயலாளர்கள் சற்குணபாண்டியன், வி.பி.துரைசாமி, கொள்கை பரப்புசெயலாளர் திருச்சி சிவா எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், கே.என்.நேரு, பொன்முடி மற்றும் கழக முன்னோடிகள் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தனர்.
டி.ஆர்.பாலுவுக்கு அறுவை சிகிச்சை செய்திருப்பதால் நேரில் வந்து சந்திப்பதை தவிர்க்குமாறு மருத்துவர்கள் வலியுறுத்துகின்ற காரணத்தால், அவர் பூரண குணமடைந்து இல்லம் திரும்பிய பின்னர் உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள், தோழர்கள் சந்திக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.