என் தலைவருக்கு முடியலையே... துக்கம் தாங்காமல் தூக்கில் தொங்கிய திமுக தொண்டர்!
கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தொண்டர் தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை: எண்ணூரில் கருணாநிதி உடல்நிலை குறித்து மனவேதனை அடைந்த தி.மு.க. தொண்டர் துக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
திருவொற்றியூர்: கருணாநிதி உடல்நிலை குறித்து அதிக கவலையும் வருத்தமும் அடைந்த தீவிர தொண்டர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கடந்த சில தினங்களாக திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாரடைப்பால் மரணம்
கருணாநிதியின் உடல்நலம் குறித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலுள்ள அவரது தொண்டர்கள் மிகுந்த மனவேதனையில் உள்ளனர். இதனால் மனம் தாளாமல் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து சென்னை காவிரி மருத்துவமனைக்கும் வந்து சென்று கொண்டிருக்கின்றனர். நேற்று கருணாநிதியின் உடல்நிலை கேள்விப்பட்டு திருவாரூரில் திமுக நிர்வாகி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

யாரிடமும் பேசவில்லை
இந்நிலையில், சென்னை எண்ணூரிலும் திமுகவின் தீவிர தொண்டர் ராஜூ என்பவர் உயிரிழந்துள்ளார். 63 வயதான ராஜூ, அனல்மின் நிலைய ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர். அத்துடன் திமுகவின் முன்னாள் வட்ட செயலாளராகவும் இருந்தவர். கருணாநிதி உடல்நிலை மோசமடைந்த செய்தி கேள்விப்பட்டு கடந்த இரு தினங்களாகவே மன வேதனையுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் யாரிடமும் பேசாமல், சாப்பிடாமலும் இருந்து வந்துள்ளார்.

தூக்கு போட்டு தற்கொலை
இந்நிலையில் இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்றிருந்த மனைவி வீடு திரும்பியபோது, கணவன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

துக்கம் தாளாமல் தற்கொலை
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ராஜூவை அழைத்து கொண்டு மருத்துவமனை சென்றார். ஆனால் ராஜு ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், துக்கம் தாளாமல் ராஜு தற்கொலை செய்துகொண்டார் என தெரியவந்தது.












Click it and Unblock the Notifications