அதிமுக அரசை கலைக்க திட்டம் போட்டு காய் நகர்த்தும் திமுக?
சென்னை: எப்படியாவது இந்த ஆட்சி கலைந்து தேர்தல் நடைபெற வேண்டும் என்று திமுக விரும்பி சட்டசபைக்குள் கடும் அமளியை ஏற்படுத்தியதாக தெரிகிறது.
இன்று நடைபெறுவது அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு. இதில் வெற்றி பெற்றால் சசிகலா தரப்பும், தோல்வியடைந்தால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். எனவே அந்த இரு தரப்பும் அதிகப்படியான அக்கறை எடுத்து செயல்பட்டது, எதிர்பார்க்கப்பட்டதே. ஆனால் திமுகவினர் சட்டசபைக்குள் மிகப்பெரும் அமளியை கட்டவிழ்த்துவிட்டது ஏன் என்பதே கேள்வி.
இந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் மனநிலை மாறியுள்ளதை திமுக நன்கு புரிந்து வைத்துள்ளது. எதைச் செய்தாவது ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலில் மக்களை சந்திக்க வர வேண்டும் என்பதே பெருவாரியான மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது. இதை உணர்ந்து கொண்ட திமுக அமளியில் ஈடுபட்டால் கூட மக்களின் கோபம் நம் மீது திரும்பாது என கணக்கு போட்டதாக கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றால் எடப்பாடி அணியிலிருந்தும் அவருக்கு எதிராக ஓட்டுக்கள் விழ வாய்ப்புள்ளது, எனவே ஆட்சி கலைந்து தேர்தலை சந்திக்கலாம் என்பதே திமுகவின் திட்டம். எனவேதான் ரகசிய வாக்கெடுப்பு கேட்டு ஸ்டாலின் இன்று சட்டசபையில் பேசினார். அதை சபாநாயகர் ஏற்காத நிலையில் அமளியை கையில் எடுத்தது திமுக.
மொத்தத்தில் அமளியை காரணமாக வைத்து ஆட்சி கலைப்புக்கு ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறது திமுக. இனிவரும் காட்சிகளை பொறுத்திருந்து பார்க்கலாம்.