சிறுதாவூர் பங்களாவில் அதிரடி ரெய்டு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு திமுக கோரிக்கை
சென்னை: பல ஆயிரம் கோடி பணம் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், கண்டெய்னர் லாரிகள் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதாகவும் சிறுதாவூர் பங்களா குறித்து பரபரப்பு நிலவுகிறது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க இங்கு பணம் பதுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே அங்கு அதிரடி ரெய்டு நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு திமுக கோரிக்கை வைத்துள்ளது.
சிறுதாவூர் பங்களா விவகாரம் குறித்து முதலில் அம்பலப்படுத்தியவர் வைகோதான். அவர்தான் அங்கு கண்டெய்னர் லாரிகள் மர்மான முறையில் நடமாடியதாகவும், அதிலிருந்து கோடிக்கணக்கில் கட்டுக் கட்டாக பணம் கொண்டு வரப்பட்டதாகவும் பரபரப்புத் தகவலை வெளியிட்டார்.

இதையடுத்து சிறுதாவூர் பங்களா பக்கம் அனைவரின் கவனமும் திரும்பியது. இந்த சந்தேகத்தை அதிகரிக்கும் வகையில் அங்கு 20க்கும் மேற்பட்ட சிறிய லாரிகள் திடீரென வந்து குவிந்தன. அவை பின்னர் மாயமாகி விட்டன. இந்த நிலையில் சிறுதாவூர் பங்களாவில் அதிரடி ரெய்டு நடத்த திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை நேரில் சந்தித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மாநிலம் முழுவதும் தேர்தல் அதிரடிப் படையினரால் கணக்குவழக்கில்லாத பணம் கைப்பற்றப்படுவதாகத் தகவல்கள் வெளியாகின்றன; ஆனால் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக பணம் வைக்கப்பட்டிருக்கும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களின் வளாகங்களில் இப்படியான சோதனை நடத்தப்பட்டதாகத் தகவல் ஏதும் இல்லை.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி தங்கும் சென்னையை அடுத்த சிறுதாவூர் பங்களாவில் கடந்த 27, 28 ஆகிய தேதிகளில் 10 கண்டெய்னர் லாரிகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன; அங்கு வாக்காளர்களுக்கான பணம் பதுக்கிவைக்கப்பட்டு இருந்ததாகவும் பின்னர் அந்த லாரிகள் அங்கிருந்து வேறிடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டன என்றும் காட்சி ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் படத்துடன் செய்திகள் வந்துள்ளன.
எனவே, அந்த வாகனங்களின் நடமாட்டம் குறித்தும் அந்த பங்களாவிலும் உடனடியாக முழுமையாக சோதனை நடத்தப்படுவது முறையாகவும் நேர்மையாகவும் தேர்தலை நடத்துவதற்கு அவசியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications