குழப்பும் மு.க. அழகிரி... தொடர்பு வைத்தால் ஒழுங்கு நடவடிக்கை: திமுக எச்சரிக்கை
சென்னை: திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள மு.க. அழகிரியுடன் தொடர்பு வைத்தால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என்று திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலர் க. அன்பழகன் எச்சரித்துள்ளார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார் அவரது சகோதரர் மு.க. அழகிரி. இதனைத் தொடர்ந்து மு.க. அழகிரி ஆதரவாளர்கள், திமுகவில் இருந்து முதல் கட்டமாக நீக்கப்பட்டனர்.
பின்னர் தென் மண்டல அமைப்புச் செயலரான மு.க. அழகிரியும் தற்காலிகமாக திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் தமது ஆதரவாளர்களை சந்திக்கிறேன் என்று கூறிக் கொண்டு திமுக நிர்வாகிகளை வீடு தேடி சென்று மு.க. அழகிரி பார்த்து வருகிறார்.

அண்மையில் பிரதமர் மன்மோகன்சிங், நடிகர் ரஜினிகாந்த், மதிமுக பொதுச்செயலர் வைகோ என பலரையும் சந்தித்து வருகிறார் மு.க. அழகிரி. இந்நிலையில் மதுரை திமுக வேட்பாளர் வேலுச்சாமி, மு.க. அழகிரியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்பேன் என்றும் கூறியிருந்தார்.
இதனிடையே மதுரையில் தமது ஆதரவாளர்களுடன் மு.க. அழகிரி திடீரென ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தின் முடிவில் 'கலைஞர் திமுக'வை அழகிரி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை.
க.அன்பழகன் எச்சரிக்கை
இந்த சூழ்நிலையில் திமுக பொதுச்செயலர் அன்பழகன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் போற்றி வளர்த்து வரும் கடமை- கண்ணியம்- கட்டுப்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில், யார் செயல்பட்டாலும் அதை என்றைக்கும் கழகத்தின் தலைமை பொறுத்துக் கொள்ளாது என்பதைக் கடந்த கால கழக வரலாற்றை தெரிந்தவர்கள் உணர்வார்கள்.

இன்றையச் சூழ்நிலையில் கழகத்திலிருந்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, விலக்கி வைக்கப்பட்டுள்ள தென் மண்டல முன்னாள் அமைப்புச் செயலர் மு.க. அழகிரி, தனது ஆதரவாளர்களுடன் கலந்து பேச சந்திப்பு என்ற பெயரில் ஆங்காங்கு கூட்டங்கள் ஏற்பாடு செய்து, கழகத் தோழர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்ற செய்தி தலைமைக் கழகத்துக்குக் கிடைத்து வருகிறது.
கழகத்திலிருந்து தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டுள்ள மு.க. அழகிரியுடன் எந்தவிதமான தொடர்பும் கழகத் தோழர்கள் யாரும், எந்தப் பொறுப்பில் உள்ளவர்களாயினும் வைத்துக் கொள்ளக்கூடாது என்பதை மிகவும் கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வறிக்கையை மீறி கழக உறுப்பினர் எவரும் செயல்படுவதாக தலைமைக்கு தகவல் வருமேயானால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு க.அன்பழகன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications