அடுத்த சஸ்பென்ட் .. துரைமுருகன், மூக்கையா, அனிதா ராதாகிருஷ்ணன் தலைக்கும் தொங்குகிறது கத்தி?
சென்னை: லோக்சபா தேர்தலில் கட்சிக்கு எதிராக வேலை பார்த்தார்கள் என்பதற்காக திமுகவில் 33 பேர் சஸ்பென்ட் செய்ய விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. மேலும் பல மாவட்ட செயலர்களை நீக்கியாக வேண்டும் என்ற குமுறல் கடிதங்கள் அறிவாலயத்தை நெருக்கடிக்குள்ளாக்கி வருகிறது.
லோக்சபா தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து 6 பேர் கொண்ட கட்சி சீரமைப்புக் குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் முதலில் திமுக மாவட்ட நிர்வாகங்கள் 65 ஆக பிரிக்கப்பட்டன. பின்னர் திமுக பெருந்தலைகளான பழனிமாணிக்கம், முல்லைவேந்தன், கே.பி. ராமலிங்கம் உட்பட 33 பேர் அதிரடியாக சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.
ஸ்டாலின் ஆதரவாளர்கள்
அதே நேரத்தில் இந்த சஸ்பென்ட் நடவடிக்கையே பாரபட்சமானது என்ற வாதம் திமுகவில் வலுத்து வருகிறது. குறிப்பாக ஸ்டாலினின் ஆதரவாளர்கள் ஒருவர் கூட ஏன் சஸ்பென்ட் செய்யப்படவில்லை என்பது எதிர்தரப்பினரின் கேள்வி.
துரைமுருகன்..
அதுவும் வேலூர் லோக்சபா தொகுதியில் முஸ்லிம் லீக் கட்சிக்கு எதிராக பகிரங்கமாக வேலை பார்த்தது திமுக துணைப் பொதுச்செயலர் துரைமுருகனும் அவரது ஆதரவாளர்களும்தான். இதனாலேயே அங்கு முஸ்லிம் லீக் தோற்றது என்றும் கூறப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி துரைமுருகனை கழற்றிவிட ஸ்டாலின் நினைத்திருந்தாராம்.
கருணாநிதி எதிர்ப்பு
ஆனால் துணைப் பொதுச்செயலராக இருக்கும் துரைமுருகன் மீது ஒரு தேர்தலுக்காக நடவடிக்கை எடுத்தால் சரியாக இருக்காது என்று கருணாநிதி தடுத்திருக்கிறார். இப்படியே விட்டுக் கொடுத்து போனால் ஏன் ஒழுங்கு நடவடிக்கை என்று எகிறியும் இருக்கிறாராம் ஸ்டாலின். அதன் பின்னர்தான் துரைமுருகனுக்கு இனி மாநிலப் பொறுப்பே வழங்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் அவரை சஸ்பென்ட் பட்டியலில் இருந்து விடுவிக்கவும் ஒப்புதல் தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின்.
நெருக்கடி கொடுக்கும் முஸ்லிம் லீக்
இருப்பினும் எதிர்தரப்பினரோ விடுவதாக இல்லை. அதுவும் முஸ்லிம் லீக் கட்சியோ கருணாநிதிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் துரைமுருகன் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி அறிக்கை கொடுக்கவும் ரெடியாகி இருக்கிறது. இதனால் வேறுவழியே இல்லாமல் அடுத்த பட்டியலில் துரைமுருகன் இடம்பெறப் போவது உறுதி என்றும் கூறப்படுகிறது.
தேனி மூக்கையா
அதேபோல் தேனி தொகுதியில் வேட்பாளர் பொன். முத்துராமலிங்கத்துக்கு எந்த ஒரு ஒத்துழைப்பையுமே வழங்காத மாவட்ட செயலாளர் மூக்கையா மீது ஏன் நடவடிக்கை பாயவில்லை என்று தென் திசையில் இருந்து குரல்கள் வலுவாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
தூத்துக்குடி அனிதா ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி முரட்டு பக்தர் பெரியசாமியும் தம் பங்குக்கு மகன் ஜெகனை தோற்கடிக்க அனிதா ராதாகிருஷ்ணன் வேலை செய்தார்..அவரையெல்லாம் விட்டுவிட்டீர்களே என்று கண்ணீரும் கம்பலையுமாக குமுறுகிறாராம்.
திருச்சி செல்வராஜ்
இதுதான் வாய்ப்பென்று திருச்சி செல்வராஜை எப்படியும் கட்சியைவிட்டு வெளியேற்றிவிடுவது என்று மும்முரம் காட்டி வருகிறதாம் திருச்சி நேரு தரப்பு. அடுத்தடுத்து செல்வராஜ் மீது ஏகப்பட்ட புகார்களை அனுப்பிக் கொண்டே இருக்கிறார்களாம் நேரு தரப்பு.
வீரபாண்டி ராஜா
மேலும் சேலத்தில் பாப்பாரப்பட்டி சுரேஷை நீக்கிய திமுக., வேட்பாளர் உமாராணியுடன் முட்டி மோதிக் கொண்டிருந்த வீரபாண்டி ராஜாவை சஸ்பென்ட் செய்யாதது ஏன்? அவரையும் நீக்க வேண்டும் என்று குரல் எழுப்புகிறார்களாம்.
பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன்
தருமபுரியில் முல்லைவேந்தன், இன்பசேகரனை களை எடுத்தது போல் கிருஷ்ணகிரி பொறுப்பாளர் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், தொகுதி பக்கமே செல்லாமல் சேலத்திலேயேதான் இருந்தாரே.. அவரை ஏன் நீக்கவில்லை என்ற குரலும் வலுக்கிறதாம்.
மதுரை தளபதி
இத்தனை களேபரங்களுக்கும் மத்தியில் மதுரையிலும் குத்துவெட்டு விஸ்வரூபமெடுத்திருக்கிறது. மாவட்ட செயலாளர் தளபதி மீது வேட்பாளர் வேலுசாமி புகார் மேல் புகார் கொடுத்தும் ஒரு அசைவும் இல்லையே.. அப்படியெனில் இது பாரபட்சமான நடவடிக்கைதானே என்கிறதாம் மதுரை குரல்.
என்.கே.கே.பி. ராஜா
ஈரோட்டில் வேட்பாளருக்கு வேலை பார்க்காத என்.கே.கே.பி. ராஜா மீது ஒரு நடவடிக்கையுமே ஏன் இல்லை என்று விழிபிதுங்கி விவாதிக்கிறார்கள்.
சுரேஷ் ராஜன்
கன்னியாகுமரியில் திமுகவின் படுதோல்விக்கு சுரேஷ் ராஜனும் ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படும் நிலையில் அவர் மீது கை வைக்காமல் இருப்பது ஏனோ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
அடுத்த பட்டியலில்?
இப்படி ஏன்? ஏன்? என்று கேள்விகள் கிளம்பும் நிலையில் அடுத்த சஸ்பென்ட் பட்டியல்களில் துரைமுருகன், மூக்கையா, வீரபாண்டி ராஜா, அனிதா ராதாகிருஷ்ணன் பெயர்கள் இடம்பெற்றால் ஆச்சரியமில்லை என்கிறது அறிவாலய வட்டாரங்கள்.