100 ஏக்கரில் திமுக மகளிரணியின் மதுவுக்கு எதிரான மகளிர் மாநாடு: கருணாநிதி பங்கேற்பு
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே மதுவுக்கு எதிரான மகளிர் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் பங்கேற்று பேச உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 100 ஏக்கர் பரபரப்பளவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பந்தலில் பல்லாயிரக்கணக்கான மகளிரை அழைத்து வர மாவட்ட செயலாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மது விலக்கு அமல்படுத்தப்படும் என்று கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கருணாநிதிக்கு அறிவித்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மதுவை எதிர்க்கும் மகளிர் மாநாடு படப்பை கரசங்காலில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டினை பிரம்மாண்டமாக நடத்த திமுக மகளிரணி திட்டமிட்டுள்ளது. மாநாட்டையொட்டி 100 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட பந்தல் போடப்பட்டுள்ளது. வழிநெடுக கொடி, தோரணங்கள் பேனர் வைக்கப்பட்டு உள்ளன.
50000 மகளிர் பங்கேற்பு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து சுமார் 50 ஆயிரம் பெண்கள் பங்கு பெறும் இந்த மாநாட்டில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர். இந்த மாநாட்டில் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கனிமொழி எம்.பி. அறிக்கை விடுத்துள்ளார்.
திரண்டு வர அழைப்பு
இம்மகளிர் மாநாடு குறித்து, காஞ்சீபுரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் தா.மோ.அன்பரசன், தெற்கு மாவட்டக் கழக செயலாளர் க.சுந்தர் ஆகியோரும் அழைப்பு விடுத்துள்ளனர். காஞ்சீபுரம் வடக்கு, தெற்கு மாவட்டங்களில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர் சிற்றூர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மகளிரும், கழகத்தினரும் அலைகடலென அணி திரண்டு வந்து இம்மாநாட்டை வெற்றி மாநாடாக ஆக்கி காட்ட வேண்டும் என்றும், கரசங்காலில் ஒன்று திரண்டு சரித்திரம் படைப்போம் என்றும் அழைப்பு விடுத்துள்ளனர்.
தேர்தலுக்கு முன்னோட்டம்
2016ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு தயாராகி வருகின்றன. அதிமுக அரசின் நான்காண்டு சாதனையை விளக்கும் வகையில் துண்டு பிரசுரங்களை அதிமுக மகளிரணியினர் விநியோகிக்கத் தொடங்கியுள்ளனர்.
திமுக மகளிரணி
அதிமுக மகளிரணியினருக்கு போட்டியாக மதுவிலக்கு அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு நடத்துகிறது திமுக மகளிரணி. இது வெறும் நன்றி தெரிவிக்கும் மாநாடாக மட்டுமல்லாது சட்டசபைத் தேர்தலில் மகளிர் அணியினர் எப்படி பணியாற்றவேண்டும் என்பதற்கு பயிற்சி தரும் முன்னோட்ட மாநாடு என்றே கூறப்படுகிறது.