ஜல்லிக்கட்டுக்காக ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதம் - திமுக அறிவிப்பு
தமிழகத்தில் ஜல்லிக்கட்டை உடனே நடத்த வலியுறுத்தி திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும், வாடிவாசல் திறக்கும் வரை வீடுவாசல் செல்லமாட்டோம் என்று கூறி மாநிலம் தழுவிய போராட்டத்தை மாணவர்கள், இளைஞர்கள் நடத்தி வருகின்றனர்.
அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்களுக்கு இந்த போராட்டத்தில் அனுமதியில்லை. எனவே இப்போது அரசியல் கட்சியினரும், சினிமா துறையினரும் தனி தனியாக போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டத்திருத்தம் தேவை என்று கோரி திமுக சார்பில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. நாளைய தினம் தமிழகத்தில் உடனே ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி சென்னையில் ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க உள்ளனர். நாளை காலை 8 மணி முதல் மாலை 5 வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
நாங்க நாலு நாலா சாப்பிடமா சோறு தண்ணியில்லாமா போராட்டம் பண்றோம்... இப்போ வந்து நீங்க சொல்றீங்க போய் வேற பொழப்ப பாருங்கப்பா என்ற குரல்கள் இப்போது மாணவர்களின் போராட்டகளத்தில் இருந்து ஒலிக்கத் தொடங்கியுள்ளது.