ஆட்சியை கைப்பற்றுவதில் மட்டுமே இரு கோஷ்டிகளும் மும்முரம்.. ஸ்டாலின் விளாசல்!
ஆட்சியைக் கைப்பற்றுவதில் மட்டுமே அதிமுகவின் இரு கோஷ்டிகளும் ஆர்வம் காட்டி வருவதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: ஆட்சியைக் கைப்பற்றுவதில் மட்டுமே அதிமுகவின் இரு கோஷ்டிகளும் ஆர்வம் காட்டி வருவதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். பதவியைக் காப்பாற்றவே அமைச்சர்கள் மெனக்கெட்டு வருவதாகவும் ஸ்டாலின் சாடியுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எல்லையம்மன் கோயில் குளத்தை தூர்வாரும் பணி திமுக சார்பில் நடைபெற்றது. இதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு தூர் வாரும் பணியை தொடங்கி வைத்தார்.
முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.

பதவியை காப்பாற்ற..
அப்போது மக்கள் பிரச்சனைகளை அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை என அவர் குற்றம் சாட்டினார். பதவியை காப்பாற்றவே அமைச்சர்கள் மெனக்கெடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கோஷ்டிகளை இணைப்பதில்..
பிரிந்து கிடக்கும் அதிமுகவின் இரு கோஷ்டிகளையும் இணைப்பதில்தான் அமைச்சர்களுக்கு அக்கறை என்றும் அவர் கூறினார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பினாமி அரசு தமிழகத்தில் நடைபெற்று வருவதாகவும் அவர் சாடினார்.

மத்திய அரசிடம் மண்டியிட்டு..
ஊழல் மற்றும் மணல் கொள்ளை ஆகியவற்றில் மட்டுமே அரசு ஆர்வம் காட்டி வருகிறது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். வருமான வரித்துறை சோதனைகளில் இருந்து தப்பவே எடப்பாடி அரசு மத்திய அரசிடம் மண்டியிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசு தவறி விட்டது..
நீர்நிலைகளை பாதுகாக்க அரசு தவறி விட்டதாகவும் அவர் கூறினார். தண்ணீர் சேமிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications