விடுதலைக்குப் போராடிய சீர் மரபினரை இழிவுபடுத்தும் தீரன் திரைப்படத்தைக் கண்டித்து கரூரில் போராட்டம்
நாட்டின் விடுதலைக்குப் போராடிய சீர் மரபினரை இழிவுபடுத்தும் வகையில் தீரன் திரைப்படம் இருக்கிறது என சர்ச்சை வெடித்துள்ளது.
கரூர்: நாட்டின் விடுதலைக்குப் போராடிய சீர் மரபினரை கொள்ளையர்களாக சித்தரிக்கும் தீரன் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி கரூரில் நேற்று போராட்டம் நடைபெற்றது.
ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய மண்ணின் பூர்வகுடிகளை வெல்ல முடியாமல் அவர்களை குற்றப்பரம்பரையினர் என முத்திரை குத்தி அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. இப்படிப்பட்ட குற்றப்பரம்பரையாக்கப்பட்ட பவேரியாக்களில் சிலர் கொடூர கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் அவர்கள் வேட்டையாடப்படுவதாகவும் தீரன் திரைப்படம் விரிகிறது.

ஆனால் குற்றப்பரம்பரை என்ற சொல்லே ஆங்கிலேயர் திணித்தது; தமிழ்நாட்டில் இப்படி குற்றப்பரம்பரையாக்கப்பட்டு தற்போது சீர் மரபினர் என்ற பிரிவில் பல்வேறு சமூக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீரன் திரைப்படமானது இந்த சீர் மரபினர் மக்களையும் கொள்ளையர்களாக, கொடூரர்களாக சித்தரிப்பதாக இருக்கிறது என்பது சீர் மரபினரின் குற்றச்சாட்டு.

ஆகையால் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சீர் மரபினர் தீரன் திரைப்படத்தை தடை செய்யக் கோரியும் படக் குழுவினர் மன்னிப்பு கேட்க கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர். கரூரில் கொங்குநாடு வேட்டுவக் கவுண்டர் இளைஞர் நலச் சங்கத்தினர் நேற்று தீரன் திரைப்படத்தைத் தடை செய்யக் கோரி போராட்டம் நடத்தினர். இந்த அமைப்பின் கரூர் மாவட்ட செயலாளர் பசுவை சந்தோஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications