கருணாநிதியை தீய சக்திகள் சூழ்ந்துள்ளன… திமுகவை விட்டு விலகமாட்டேன்: அழகிரி
மதுரை: கருணாநிதியை தீய சக்திகள் சூழ்ந்துள்ளன என்றும் தாம் ஒருபோதும் திமுகவை விட்டு தாம் விலகப்போவதில்லை என்றும் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பியுமான மு.க. அழகிரி கூறியுள்ளார்.
மதுரை தயா மஹாலில் தனது ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி இன்று காலை முதல் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில், புதிய கட்சி பற்றிய முடிவை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்புடன் அவரது ஆதரவாளர்கள் கூட்டம் தயா மஹாலில் நிரம்பி வழிகிறது.
இந்நிலையில் தமது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அழகிரி, கூறியதாவது:
போஸ்டர் பிரச்சினை
"கட்சியில் என்ன நடந்தது என்பது குறித்து , உங்களிடம் கலந்து பேசவும், அடுத்து நாம் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் உங்களிடம் விவாதிக்கவே நான் உங்களை இன்று அழைத்துள்ளேன். முதலில் எழுந்தது போஸ்டர் பிரச்னை, பொதுக்குழுவை கூட்ட போவதாக ஒட்டிய போஸ்டர். இதன் வினையால் தான் நாம் தற்போது இங்கு ஆலோசித்து வருகிறோம்.
போஸ்டர் ஒட்டியது தவறா?
அடுத்து தொலைக்காட்சியில் பேட்டி பார்க்க சொல்லி, ஒரு தொண்டர் போஸ்டர் அடித்தார். அது தவறா ? அவரையும் கட்சியில் இருந்து நீக்கலாமா? புதுப்படம் வரும் போது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டுவதில்லையா ?
பழிவாங்கப்பட்டேன்
கொட்டாம்பட்டி, திருப்பரங்குன்றம், ராம்நாடு, தேனி, ஆகிய பகுதிகளில் நடந்த உள்கட்சி முறைகேடு தொடர்பாக ஆதாரத்துடன் தலைவரிடம் கொடுத்தேன். நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்க சொன்னேன். ஆனால் எனது ஆதரவாளர்களை நீக்கி விட்டார்கள் , அடுத்து நியாயம் கேட்ட போது என்னை நீக்கினார். தொடர்ந்து அடுத்து அடுத்து பழிவாங்கப்பட்டேன். தாங்க முடியாத பழி சொல்லுக்கு ஆளானேன். இதனால் எனது குடும்பம் பெரும் மன உளச்சலில் உள்ளது.
ரஜினியுடன் அண்ணன் தம்பி உறவு
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஜினியை சந்தித்தேன், அவர் என்னை சந்திக்க வாய்ப்பு மற்றும் ஒத்து கொண்டது பெரும் மகிழ்ச்சி, இதோடு அவர் என்னை அண்ணன், தம்பி போன்று நமது உறவு என்றார். இது எனக்கு பெரும் மன நிம்மதியை தந்தது.
வைகோ உடன் நட்பு
தொடர்ந்து பிரதமர் சந்திப்பு, இதனையடுத்து பா.ஜ., தலைவர் என்னை அழைத்து ஆதரவு கேட்டார். வைகோ, திருநாவுக்கரசர் ஆகியோர் சந்தித்தனர். வைகோ என்றும் போல் நட்பு மாறாமல் இருப்பதை உணர முடிந்தது.
கருணாநிதிக்கு நெருக்கடி
தற்போது தி.மு.க., கருணாநிதி கட்டுப்பாட்டில் இல்லை. ஏதோ ஒரு நெருக்கடி அவருக்கு இருந்து வருகிறது. என்ன நெருக்கடி என்று கேட்டால் அவர் சொல்ல மறுக்கிறார்.
தீயசக்தி சூழ்ந்துள்ளது
கருணாநிதியை தீய சக்தி சூழ்ந்துள்ளது. திமுக நான் வளர்த்த கட்சி. அக்கட்சியைவை விட்டு விலகப்போவதில்ல. , நீதிக்காகக் போராடப்போகிறேன்.
கட்சியை காப்பாற்றுவேன்
கட்சியையும், கருணாநிதியையும் காப்பாற்றுவதே நமது முதல் கடமையாக இருக்க வேண்டும். இன்னும் தொடர்ந்து பல மாவட்ட கட்சியின் அதிருப்தியாளர்களை சந்திக்கவுள்ளேன். அவர்கள் சொல்லும் கருத்துக்கள் குறித்து ஆராயப்படும்" என்று அழகிரி கூறியுள்ளார்.
புதுக்கட்சி இல்லை
அழகிரியின் பேச்சுக்களை கவனிக்கும் போது அவர் இப்போதைக்கு புதுக்கட்சி எதுவும் தொடங்கி திமுகவிற்கும் கருணாநிதிக்கும் நெருக்கடி கொடுக்கமாட்டார் என்றே கூறப்படுகிறது.
35 வேட்பாளர்களை மாத்துங்க
திமுக வேட்பாளர்கள் தேர்வு, இந்த முறை காசு வாங்கிக் கொண்டுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. இது நன்றாகத் தெரிகிறது. கட்சிக்கு உண்மையாக உழைத்தவர்களுக்கு இடமில்லை. யாரென்றே தெரியாதவர்கள் எல்லாம் காசு கொடுத்துவிட்டு வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். எனவே, 35 வேட்பாளர்களையும் மாற்ற வேண்டும்.
துரைமுருகன் மீது நடவடிக்கை
வேலூரில் கேவிகுப்பம் என்ற இடத்தில் முஸ்லிம் லீக் வேட்பாளர் தொகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்றபோது உள்ளே வரக்கூடாது என்று சிலர் குரல் கொடுத்தனர். அவர்கள் துரை.முருகன் ஆதரவாளர்கள் தான். தங்களுக்கு கட்சி வாய்ப்பளிக்கவில்லை, கூட்டணிக்கு வாய்ப்பளித்துள்ளனர் என்று அவர்கள் கோஷம் இட்டுள்ளனர். என் மீது நடவடிக்கை எடுத்ததுபோல், இப்போது, துரை முருகன் மீதும் கட்சி நடவடிக்கை எடுக்குமா?
ஜெயல்லிதாவுக்கு பாராட்டு
அதிமுகவில் கட்சியின் மாவட்ட செயலாளர்களை மாதம்தோறும் மாற்றிவரும் ஜெயலலிதாவின் நடவடிக்கை பாராட்டத்தக்கது. அதனால்தான் கட்சி கட்டுக்கோப்பாக இருக்கிறது. அது திமுகவில் இல்லை என்றும் அழகிரி கூறினார்.
மாவட்டந்தோறும் கூட்டம்
இன்னும் சில மாவட்டங்களில் ஆதரவாளர்களை சந்தித்துப் பேசி என்னுடைய முடிவினை வெளியிடுவேன் என்றும் அழகிரி கூறியுள்ளார்.