ஏடிஎம் ரகசிய எண்ணை யாரிடமும் பகிர வேண்டாம் - காவல்துறை எச்சரிக்கை
சென்னை: ஏடிஎம் ரகசிய எண்ணை யாரிடமும் பகிர வேண்டாம் என புதுச்சேரி சிபிசிஐடி போலீஸ் எஸ்பி ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மக்கள் சைபர் குற்றவாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும். வங்கி கணக்கு சம்பந்தப்பட்ட ரகசிய எண்கள், குறியீடுகளை யாரிடத்திலும், உறவினர்களிடம் கூட தெரிவிக்க வேண்டாம். வங்கி கணக்கு சம்பந்தப்பட்ட ரகசிய குறியீடு மற்றும் எண்களை எந்த வங்கி அதிகாரியும் எந்த சூழ்நிலையிலும் தொலைபேசியில் கேட்க மாட்டார்கள்.
அவ்வாறு கேட்கவும் கூடாது. எனவே யாரிடமும் அவற்றை கூறாதீர்கள். உங்களது வங்கி கணக்கு சம்பந்தப்பட்ட ரகசிய குறியீட்டையும், எண்களையும் யாராவது தொலைபேசியில் கேட்டால் உங்களது வங்கி அதிகாரியை உடனே அணுகி, உங்களது பணம் திருடப்படுவதை தடுக்கவும்.
வங்கி கணக்கு சம்பந்தப்பட்ட விவரங்களை கனிவாக பேசும் சைபர் குற்றவாளிகளிடம் போனில் கூறி பணத்தை இழக்காதீர்கள். உங்களுடைய டெபிட் மற்றும் கிரடிட் கார்டுகளை மற்றவர்களிடம் கொடுத்து பணத்தை ஏமாறாதீர்கள். ஏடிஎம் மைங்களுக்கு செல்லும் போது ஏடிஎம் மெஷினில் ஏதேனும் வழக்கத்திற்கு மாறான சந்தேகப்படும் படியான உபகரணங்கள் தென்பட்டால் அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு தெரியப்படுத்தவும் என்று அதில் கூறப்பட்டுள்ளது