வைகோ – ராமதாஸ் சந்திப்பு…. அரசியல் பேசவில்லையாம்!!
சென்னை: ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சந்தித்து தனது பேத்தி பேரன்களின் திருமணத்தின் அழைப்பிதழ் கொடுத்தார். அரசியல் எதுவும் பேசவில்லை, அதற்கான நேரமும் இதுவல்ல என்றும் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாசின் மகன் அன்புமணியின் மகள் சம்யுக்தா, ராமதாசின் மகள் சாந்தியின் மகன் பிரித்தீவன் ஆகியோர் திருமணம் அடுத்த மாதம் 30 ஆம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது.
தனது பேத்தி, பேரன் ஆகியோருக்கான திருமண அழைப்பிதழை, ராமதாஸ் முக்கிய பிரமுகர்களுக்கு நேரில் கொடுத்து வருகிறார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை சென்னை அண்ணாநகர் இல்லத்தில் ராமதாஸ் சந்தித்தார். அப்போது தனது பேத்தி, பேரன் திருமண அழைப்பிதழை கொடுத்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசும்போது, ''வைகோவை சந்தித்து அரசியல் கூட்டணி தொடர்பாக எதுவும் பேசவில்லை. அதற்கான நேரம் இதுவல்ல. என் பேரன்-பேத்தி திருமணத்துக்கு வருமாறு அவரை நேரில் அழைத்தேன்" என்றார். இந்த சந்திப்பின் போது பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
நேற்று முன்தினம் தி.மு.க. தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் வீட்டில் நேரில் சந்தித்து அழைப்பிழை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.