ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் விளக்கத்தில் திருப்தி இல்லை: ஓபிஎஸ் போட்ட அடுத்த குண்டு
முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் அளித்த விளக்கத்தில் திருப்தியில்லை என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் கொடுத்த விளக்கத்தில் திருப்தியில்லை என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதனாலேயே விசாரணை கமிஷன் அமைப்பதாகவும் அவர் கூறினார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்றிரவு முதல் சசிகலா தரப்புக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இதனால் சசி தரப்பு பீதியில் உறைந்துள்ளது.
இந்நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு பேட்டியளித்தார். அப்போது ஜெயலலிதாவின் மரணம் குறித்து 60 நாட்களுக்குப் பின் மருத்துவர்கள் விளக்கமளிப்பதற்கான ஏற்பாடுகள் எனக்கு தெரியும் என அவர் கூறினார்.
மேலும் ஆனால் மருத்துவர்கள் வழங்கிய விளக்கத்தில் தனக்கு திருப்தியில்லை என்றும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அதனாலேயே ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து 60 நாட்களுக்குப் பிறகு சசிகலா குடும்பத்தினரே மருத்துவர்களின் விளக்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் மருத்துவர்களின் விளக்கத்தில் திருப்தியில்லை என ஓபிஎஸ் கூறியிருப்பது மன்னார்குடி கும்பலுக்கு மேலும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.