மெர்சல் பட "லிங்க்"கை பகிர்ந்து வசூலைக் கெடுப்போம்... டாக்டர்கள் சங்கம்
மெர்சல் படத்தை மருத்துவ சங்கத்தினர் புறக்கணிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னை : நடிகர் விஜயின் மெர்சல் படத்தை மருத்துவ சங்கத்தினர் புறக்கணிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது. மருத்துவர்களுக்கு எதிரான கருத்து படத்தில் இடம்பெற்றிருப்பதால் எதிர்ப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான மெர்சல் திரைப்படம் ரிலீஸ் முதல் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்த வசனங்களை நீக்க வேண்டும் என்று தமிழக பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாஜகவைத் தொடர்ந்து இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு பிரிவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் டாக்டர் ரவிசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு மருத்துவமனைகளில் நல்ல சேவை இல்லை என்பதால் தனியர் மருத்துவமனைகளுக்கு மக்கள் செல்கின்றனர் என்றும், பணம் சம்பாதிப்பதற்காகவே டாக்டர் தொழிலை மருத்துவர்கள் பயன்படத்துகின்றனர் என்றும் மெர்சல் படத்தில் நடிகர் விஜய் பேசுகிறார்.
டாக்டர்களுக்கு எதிரான கருத்து
மருத்துவ சமுதாயத்தினருக்கும் டாக்டர்களுக்கும் எதிராக விஜய் கருத்து தெரிவித்துள்ளார். எனவே மருத்துவ சங்கத்தினர் அனைவரும் அந்த படத்தை புறக்கணிக்க வேண்டும்.
இணைப்பு முகவரியை வெளியிடுவோம்
இந்தப் பிரச்னைக்கு நாங்கள் பத்திரிக்கைகள், கோர்ட்டு மூலமாக நிவாரணம் தேடப் போவதில்லை மாறாக புதுவித போராட்டம் நடத்த உள்ளோம். இணையதள பக்கங்களில் மெர்சல் படத்துக்கான இணைப்பு முகவரியை வெளியிடுவோம். அதன் மூலம் பலர் அந்தப் படங்களை கட்டணம் இன்றி பார்த்துவிடுவதால் டிக்கெட் விற்பனை பாதிக்கும்.
யாரும் பார்க்கக் கூடாது
இந்தத் தகவலை அனைத்து டாக்டர்களுக்கும் பரவச் செய்து அமைதி போராட்டத்தில் ஈடுபடுங்கள். உங்கள் உறவினர்கள், நண்பர்கள், மருத்துவமனை ஊழியர்கள் அந்தப் படத்தை புறக்கணிப்பதை உறுதி செய்யுங்கள்.
வசூலில் அடி கொடுப்போம்
இது நம் போராட்டத்தையும் எதிர்ப்பையும் சம்பந்தப்பட்டவர்கள் நன்றாக உணரும்படி செய்யும். நமது ஒற்றுமையை காட்டுவதோடு, கவுரவத்தையும் நிலைநாட்டுவோம். பட வசூலில் அடி கொடுத்தால் தான் அவர்கள் உணர்வார்கள் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் சங்கம் இப்படிக் கூறினாலும் கூட மெர்சல் படம் வசூலில் ஏற்கனவே சாதனை படைக்க ஆரம்பித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.