சென்னையில் நாய்களுக்கு பிரேத பரிசோதனை: துர்நாற்றத்தால் பள்ளி மாணவர்கள் பெரும் அவஸ்தை
சென்னை: சென்னை கால்நடைக் கல்லூரியில் நேற்று நூற்றுக்கணக்கான நாய்களுக்கு பிரேதப் பரிசோதனை நடத்தியதால் அதன் துர்நாற்றம் தாங்காமல் பள்ளி மாணவர்கள் பெரும் அவஸ்தைக்குள்ளானார்கள்.
சென்னையில் கடந்த 15 நாட்களில் 200க்கும் மேற்பட்ட நாய்கள் கொல்லப்பட்டுள்ளன. அவை அழுகிய நிலையிலும், மோசமான நிலையிலும் மருத்துக் கல்லூரிக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
பாலிதீன் பைகளில் கட்டப்பட்ட நிலையில் கொண்டு வரப்பட்ட நாய்களிந் உடல்கள் மருத்துவமனையில் குவித்து வைக்கப்ட்டிருந்தன. இதன் காரணமாக ஏற்பட்ட துர்நாற்றம் தாங்க முடியாமல் அருகில் இருந்த பேன்ஸ் மெமோரியல் பாப்டிஸ்ட் சர்ச் பள்ளி மாணவர்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகினர். மாடியில் இருந்த வகுப்புகளை கீழே மாற்றினர்.

ஒவ்வொரு நாய்க்கும் பிரேதப் பரிசோதனை செய்ய அரை மணி நேரம் ஆகும். அதுவே அழுகிப் போன நாயாக இருந்தால் ஒரு மணி நேரமாகுமாம். நேற்று மட்டும் 10 நாட்களுக்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.
மேலும் நாயின் உடல்களை அப்புறப்படுத்துவதும் செலவு பிடித்த சமாச்சாரம். ஒரு தனியார் நிறுவனம் ஒரு கிலோ நாயின் கழிவுகளுக்கு 40 ரூபாய் வசூலிக்கிறதாம், இதுவரை ஒரு டன் நாயின் கழிவுகளை அப்புறப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார் மருத்துவக் கல்லூரி டீன் அசோகன்.
மாணவர்களுக்கு பாதிப்பு
இந்த நாய் பிரேதப் பரிசோதனையால் மருத்துவக் கல்லூரிக்கு மிக அருகில் உள்ள பேன்ஸ் பள்ளி பெரும் சங்கடத்தை சந்தித்து வருகிறதாம். துர்நாற்றம் தாங்க முடியாத அளவுக்கு இருப்பதால் மாணவர்கள் கடும் அவஸ்தைக்குள்ளாகினர். இதுகுறித்து பள்ளி முதல்வர் சுகன்யா பிரபு கூறுகையில், மாணவர்கள் பெரும் பாதிப்பை சந்திக்கிறார்கள்.ஆனால் நாய் பிரேதப் பரிசோதனையை பிரச்சினையாக்க நாங்கள் விரும்பவில்லை. என்றார்.
ஆனால் மாணவர்கள்தான் மூக்கைப் பொத்தியபடியும், சகித்துக் கொண்டும் வகுப்புகளில் உட்காருகிறார்களாம்.
மேயருக்கு கடிதம்
இந்த விவகாரம் தொடர்பாக மேயருக்கு கடிதம் எழுதி நாய்களின் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப் போவதாக கோடம்பாக்கம் கவுன்சிலர் வாசுகி சங்கர் கூறியுள்ளார்.
மனித உரிமை ஆணையம்
இதற்கிடையே, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 160க்கும் மேற்பட்ட நாய்களைக் கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக குற்றம் சாட்ட்பட்டவர்களுக்கு மாநில மனித உரிமை ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இப்படிப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் போயுள்ளதாம்.
இவர்களில் தாமரைப்பாக்கம் பஞ்சாயத்துத் தலைவர் வெங்கடேசனும் ஒருவர். இவர் மீது மட்டும் 150 நாய்களைக் கொன்றதாக குற்றச்சாட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications