சென்னை பூராவும் ஒரே நாய்த் தொல்லை.. என்னமாச்சும் பண்ணுங்கப்பா.. மக்கள் புலம்பல்!!
சென்னை: சென்னையில் எங்கு பார்த்தாலும் ஒரே நாய்த் தொல்லையாக இருப்பதாகவும், இரவு நேரங்களில் வெளியில் நடமாடப் பயமாக இருப்பதாகவும், நாய்களின் கொட்டத்தை அடக்க ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அத்தனை நிர்வாகமும் மெளனம் காப்பதாகவும் மக்கள் புலம்புகிறார்கள்.
சென்னையில் மட்டுமல்ல, தமிழகம் பூராவுமே இந்த நாய்த் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய்களை பிடித்து கொல்வது என்பதை இப்போது தடை செய்து விட்டதால் யாருமே நாய்களைப் பிடித்துச் செல்வதில்லை.
இதன் காரணமாக நாய்கள் பெருகி விட்டன. தெருவுக்கு பத்து நாய்கள் சுற்றிக் கொண்டிருப்பதால் மக்கள் பயத்துடனேயே நடமாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கையில் பிஸ்கெட் பாக்கெட்டுடன்
இரவு நேரங்களில் வெறும் கையுடன் யாராவது தெருவிலோ, சாலையிலோ போனால் அவ்வளவுதான்.. சுற்றி பத்து நாய்களாவது உங்களை ரவுண்டு கட்டி விடும். இப்படிப்பட்ட சிக்கலிலிருந்து தப்பிக்க புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது. இந்த நாய்க் கும்பலிலிருந்து தப்பிக்க கையில் பிஸ்கெட் பாக்கெட்டுடன்தான் பலரும் போகின்றனராம்.

பைக் ஓட்டினால் கால் பத்திரம்
இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள், கார் போன்றவற்றில் வேகமாகப் போகும்போது ஏதோ பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் பிடிக்கப் பாய்வதைப் போல தெரு முழுவதும் ஆங்காங்கு படுத்துக் கிடக்கும் நாய்கள் ஒட்டுமொத்தமாக பாய்ந்து வரும். காலைத்தான் அவை பெரும்பாலும் குறி வைக்கின்றன. இதனால் எத்தனையோ பேர் நிலை தடுமாறி பைக்குடன் விழுந்த கதைகள் நிறைய உள்ளன.

நாய்த் தொல்லை குறித்த புகார்கள் அதிகரிப்பு
சென்னை மாநகராட்சியில் பல்வேறு வகையான புகார்களை மக்கள் தொலைபேசி மூலமும், நேரிலும் போய் அளித்து வருகின்றனர். அதில் அதிகபட்சமாக வரும் புகார்கள் எண்ணிக்கையில் இந்த நாய்த் தொல்லை புகார்கள் 3வது இடத்தில் உள்ளனவாம்.

ராத்திரியில் நடக்க முடியலையே
இரவு நேரங்களில் சென்னையின் எந்தப் பகுதியிலும் தனியாக நடந்து போய் விட்டு பத்திரமாக திரும்பி வந்து விட்டால் அவருக்கு வீர விருதே கொடுக்கலாம். அந்த அளவுக்கு நாய்களிடமிருந்து தப்பி லாவகமாக திரும்பி வருவது ரொம்பக் கஷ்டமாக உள்ளது.

பல்லாவரம் நாராயணன் சொல்வதைக் கேளுங்கள்...
பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் தனது நாய் அனுபவம் குறித்து 'பேய் அடித்த பீதி'யுடன் கூறுகையில், எனக்கு ராத்திரி 1.30 மணிக்குத்தான் வேலை முடியும் சார். அதன் பிறகு பைக்கை எடுத்துக் கொண்டு 2 மணிக்கு வெளியே வருவேன். வீடு போய்ச் சேரும் வரை என் உயிர் என் கையில் இல்லை. அத்தனை நாய்களும் எங்கிருந்துதான் வருமோ.. டஜன் கணக்கில் எனது பைக்கை நோக்கி பாய்ந்து வரும்.. பார்க்கவே பயங்கரமாக இருக்கும்.. மிகவும் சிரமப்பட்டு அந்த நாய்களிடமிருந்து தப்பி வீடு வந்து சேருவது என்பது நித்திய கண்டம் பூரண ஆயுசு என்பது போல உள்ளது என்றார்.

கொல்ல மாட்டோம்.. வேணும்னா கு.க பண்ணலாம்
நாய்களை இப்போது பிடித்துக் கொண்டு போவதில்லை, கொல்வதும் இல்லை. மாறாக குடும்பக் கட்டுப்பாட்டு ஆபரேஷன் செய்து அனுப்பி விடுகிறார்கள். கு.கதான் செய்கிறார்களே தவிர அவற்றின் பற்களை யாரும் பிடுங்கி அனுப்புவதில்லை. இதனால் கடி கன்பர்ம்ட் என்ற நிலைதான் தொடர்கிறது.

இது ஜூலி கதை...
இந்தப் படத்தில் இருக்கும் நாய்க் கதை ரொம்ப சுவாரஸ்யமானது. வலது ஓரம் படுத்திருக்கும் கருப்பு வெள்ளை நாயின் பெயர் ஜூலி. அதற்கு அருகே படுத்திருக்கும் நாய்கள் அத்தனையும் ஆண் நாய்கள். 'பிரேமில்' வராமல் மேலும் நான்கு நாய்கள் இதே இடத்தில் ஆங்காங்கு படுத்திருக்கின்றன. எத்தனை நாட்களாக தெரியுமா.. 4 நாட்களாக.. 'எதற்கு' என்று விளக்கத் தேவையில்லை.. நீங்களே புரிஞ்சுக்கலாம். ரொம்பப் பொறுமையாக காத்திருக்கின்றன... எத்தனை முறை விரட்டினாலும் ம்ஹூம்.. 'வேலை' முடியாமல் போவதாகத் தெரியவில்லை!

இப்படித்தான் எல்லா இடத்திலும்
இதேபோலத்தான் தெருவுக்கு ஏகப்பட்ட நாய்கள் சண்டியர்கள் போலத் திரிகின்றன. நாய்களின் இனப்பெருக்கம் அதி விரைவானது என்பதால், அவைகளை கட்டுப்படுத்துவது என்பது பெரும் சவாலுக்குரியதாக உள்ளது.

ப்ளூகிராஸ் வேஸ்ட்...
ப்ளூ கிராஸ் என்று ஒரு அமைப்பு உள்ளது. அவர்களிடம் இப்படி நாய்த் தொல்லையாக இருக்கிறது, பிடித்துக் கொண்டு போங்களேன் என்றால் நீங்களே பிடித்துக் கொண்டு வந்து விடுங்கள் என்கிறார்கள் அல்லது அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகி கு.க. ஆபரேஷன் செய்யச் சொல்லுங்கள் என்கிறார்கள். அதை விட முக்கியமாக, உடனே வர முடியாது இத்தனை நாட்கள் கழித்துத்தான் வருவோம் என்றும் சொல்கிறார்கள்...
நாலு பேர் கிட்ட அடி கூட வாங்கிடலாம்.. ஆனால் நாய்க்கடியை வாங்க முடியுமோ... ஏதாவது பண்ணுங்கப்பா...!












Click it and Unblock the Notifications