மோடியை கடுமையாக விமர்சிக்காதீர்கள்... வைகோ, ராமதாசுக்கு மீண்டும் தமிழிசை வேண்டுகோள்
சென்னை: பிரதமர் மோடியை கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என கூட்டணி கட்சித் தலைவர்களான வைகோ, ராமதாஸ் உள்ளிட்டோருக்கு மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதிமுகவும் அங்கம் வகிக்கிறது. ஆனபோதும், தொடர்ந்து பல்வேறு விஷயங்களில் பிரதமர் மோடி குறித்து வைகோ கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த வாரம் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, ‘பிரதமரை ஒருமையில் பேசுவதை வைகோ நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அவர் தமிழகத்தில் எங்குமே பாதுகாப்பாக இருக்க முடியாது' என மிரட்டல் தொனியில் பேசியிருந்தார். எச்.ராஜாவின் இந்த பேச்சுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனால், மதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறலாம் என்ற பேச்சு நிலவுகிறது.
இந்நிலையில், டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக மாணவிகள் 1000 பேர் பிரதமரின் சுத்தப்படுத்தும் திட்டத்தில் இணையும் விழா இன்று செண்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு பல்கலைக்கழக நிறுவனர் ஏ.சி.சண்முகம் தலைமை தாங்க, தலைவர் அருண்குமார் முன்னிலை வகித்தார். விழாவைத் தொடங்கி வைத்து மாணவிகளிடம் உறுதிமொழி பெற்றார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் தமிழிசை பேசியதாவது :-
கூட்டணி பற்றி வைகோ 8-ந் தேதி முடிவு எடுக்கப் போவதாக நீங்கள் கேட்கிறீர்கள். ஆனால் யூகங்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. வைகோ பிரதமர் மோடியை கடுமையாக விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும். கூட்டணி கட்சிகள் இப்படி விமர்சித்தால் மக்களிடம் தவறான உணர்வை ஏற்படுத்தி விடும். நம்பகத் தன்மையையும் ஏற்படுத்தி விடும். இதை நான் ஒரு வேண்டுகோளாகத்தான் வைத்தேன்.
ஆனால் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் என்று சொல்கிறார். என்னை பொறுத்தவரை பெரியவர் ராமதாஸ் போன்ற தலைவர்களை பார்த்து வளர்ந்தவர் நான்.
நான் சொல்வதெல்லாம் தேடி தேடி சென்று மோடியை விமர்சனம் செய்ய வேண்டாம். நல்லதை பாராட்டுங்கள். குறை இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். பொது இடங்களில் கடுமையான விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும். இதை தான் வைகோ, ராமதாஸ் போன்ற தலைவர்களுக்கு வேண்டுகோளாக வைக்கிறேன். டாக்டர் அன்பு மணி எம்.பி.யாக இருக்கிறார். தனது கோரிக்கையை நாடாளுமன்றத்தில் வைக்கலாம்.
பெட்ரோல், டீசல் விலை 5 முறை குறைக்கப்பட்டு இருக்கிறது. இதை ஏன் பாராட்ட மறுக்கிறார்கள். திருவள்ளுவர் பிறந்த தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இதை பாராட்ட வேண்டாமா?
ராஜபக்சே தேர்தலில் வெற்றி பெற மோடி வாழ்த்து தெரிவித்தது நாகரிகத்தின் அடிப்படையிலானது' என இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் புதிய நீதிக்கட்சி தலைமை நிலைய செயலாளர் ரவிக்குமார், பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் பழனிவேல், பா.ஜனதா அமைப்பு செயலாளர் மோகன்ராஜீலு, துணைத் தலைவர் சவேரா சக்கரவர்த்தி, மாவட்ட தலைவர்கள் காளிதாஸ், பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.