மரணத்திற்குப்பின்னும் சுவாதியை களங்கப்படுத்த வேண்டாம்: தந்தை உருக்கம்
சென்னை: மகளின் கோர மரணம் கண்ணை விட்டு அகலவில்லை. மரணத்திற்குப் பின்னர் அவளது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டாம் என்று அவரது தந்தை கே.சந்தான கோபால கிருஷ்ணன் ஊடகங்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை சூளைமேடு கங்கை யம்மன் கோயில் தெருவை சேர்ந்த இளம்பெண் சுவாதி,24, மறைமலை நகர் மஹிந்திரா டெக் பார்க்கில் உள்ள இன்போசிஸ் ஐ.டி. நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். திருமணமாகாதவர்.
அலுவலகத்துக்கு செல்வதற்காக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் காலை 6.30 மணி அளவில் வந்த இவர், மர்ம நபரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது சென்னை மக்கள், ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொலையாளி இவரா?
சந்தேகத்தின் அடிப்படையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான இளைஞரின் படத்தை ரயில்வே போலீஸ் வெளியிட்டுள்ளது. ரயில்வே போலீசார் தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

காதல் பிரச்சினையா?
சுவாதி வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவரை காதலித்தார் என்றும், ஒரு தலைக்காதலால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பு கூறுவதாக ஊடகங்களில் செய்திகளில் வெளியாகி வருகின்றன.

களங்கம் வேண்டாம்
சுவாதியின் மரணத்திற்கு பின்னர் இதுபோன்று வெளியாகும் தகவல்கள்தான் அவரது குடும்பத்தினரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை, பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

கொலைக்கான பின்னணி
சுவாதியின் கொலையின் பின்னணி குறித்து ஊடகங்களில் வதந்திகளை எழுதி அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தங்கள் குடும்பம் அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நடத்தை படுகொலை
சுவாதியின் உயிரை இனி யாரும் கொண்டு வரப்போவதில்லை. பிறகு ஏன் அவளது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும், நடத்தையைப் படுகொலை செய்ய வேண்டும்?" என்றும் சுவாதியின் தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.

குற்றம் நடந்தது என்ன?
பட்டப்பகலில் நடந்த ஒரு கொலை, அந்த கொலைக்கான காரணம், கொலையாளி யார் என்று இதுவரை தெரியாத நிலையில் கொலைக்கான பின்னணி இதுவாக இருக்கலாம், அதுவாக இருக்கலாம் என்று கற்பனை செய்து எழுதுவதை இனியாவது செய்திகள் எழுதுவதை நிறுத்த வேண்டும் என்று சுவாதியின் உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications