லோக்சபா தேர்தலில் அதிமுகவை டெபாசிட் இழக்கச் செய்யுங்கள்: ராமதாஸ்
தர்மபுரி: லோக்சபா தேர்தலில் அதிமுகவை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தர்மபுரி லோக்சபா தொகுதி பாமக வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் அன்புமணி ராமதாஸை வேட்பாளராக அறிமுகப்படுத்தி வைத்த ராமதாஸ் பேசியதாவது:
தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் போட்டியிட உள்ளார். அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு.

அன்புமணியின் வெற்றி
1989ம் ஆண்டு பாமக தொடங்கப்பட்டது. தொடங்கிய 4 மாதத்தில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது. தர்மபுரி தொகுதியில் தனியாக 2 லட்சம் வாக்குகள் பெற்றது. 24 ஆண்டுக்கு பின் அன்புமணி ராமதாஸ் வேட்பாளராக தர்மபுரியில் நிற்கிறார். இந்தியாவில் எந்த வேட்பாளரும் பெறாத அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அன்புமணி வெற்றி பெறுவார்.

டெபாசிட் இழக்க வேண்டும்
அதிமுக, திமுகவுக்கு பாடம் புகட்ட ஏப்ரல் 24ம் தேதியை மக்கள் எதிர்பார்த்து கர்த்திருக்கின்றனர். பென்னாகரம் பார்முலா அதிமுகவை டெபாசிட் இழக்க வைத்தது. அதுபோல் வரும் லோக்சபா தேர்தலில் அதிமுகவை டெபாசிட் இழக்க வைத்து படுதோல்வி அடைய செய்ய வேண்டும். அது தான் என்னுடைய ஆசை. இதை இளைஞர்கள் செய்வார்கள்.

அமைதிப்பூங்கா
தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க பாமக விரும்புகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் அதிகாரிகள் நடத்த வேண்டும். ஜெயலலிதா ஆட்சியை அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் மக்கள் ஒதுக்கி, தூக்கி வீச ஆரம்பித்து விடுவார்கள்.

பாமக தலைமையில் ஆட்சி
2016ல் அதிமுக தோல்வியடையும். புதிய ஆட்சி பாமக தலைமையில் அமையும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.












Click it and Unblock the Notifications