நக்சலைட் போல கைது செய்வதா? இந்த மிரட்டலுக்கு பயப்படமாட்டோம் - தினகரன்
எங்களுக்கு ஆதரவாக வரும் தொண்டர்கள் நள்ளிரவில் நக்சலைட் போல கைது செய்வதா? இதற்கெல்லாம் பயப்பட மாட்டோம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகரில் காவல்துறை ஏவல்துறையாக மாறிவிட்டது. நள்ளிரவில் நக்சலைட் போல கைது செய்கின்றனர். இந்த மிரட்டலுக்கு எல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதியில் வரும் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
கடந்த இரண்டு நாட்களாக, தினகரன் தரப்பினர் பணப் பட்டுவாடாவில் ஈடுபடுவதாகவும், இதற்காக வெவ்வேறு ஊர்களிலிருந்து ஆட்கள் ஆர்.கே.நகருக்கு வரவழைக்கப்பட்டதாகவும் பாஜகவினர் குற்றம்சாட்டிவருகின்றனர்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் பகிரங்கமான குற்றச்சாட்டுக்கு பதிலாக, பாஜகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று தெரிவித்திருந்தார் தினகரன்.

நள்ளிரவில் கைது
இந்த நிலையில், நேற்று இரவு தினகரன் ஆதரவாளர்கள் 6க்கும் மேற்பட்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சிலர் மீது கொடுங்கையூர் காவல் நிலையத்திலும், சிலர் மீது ராயபுரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி, அவசர அவசரமாக அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

டிடிவி தினகரன் புகார்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்.கே.நகரில் தினகரன் ஆதரவாளர்கள் இன்று காலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையரை டிடிவி தினகரன் சந்தித்து புகார் அளித்தார். செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், காவல்துறை, ஏவல்துறையாக மாறிவிட்டதாக குற்றம் சாட்டினார். இதெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே பார்த்து விட்டதாக கூறினார்.

நக்சலைட் போல கைது செய்வதா?
பணம் கொடுப்பதாக கூறி எங்கள் நிர்வாகிகளை குறிவைத்து கைது செய்கின்றனர்.தீவிரவாதிகளை பிடிப்பது போல கைது செய்கின்றனர். எங்கள் மீது பணப்பட்டுவாடா புகார் சொல்கின்றனர். நக்சலைட் போல நள்ளிரவில் கைது செய்வதா?. இதுக்கெல்லாம் பயப்படுற ஆளு நாங்க இல்லை.

ஈபிஎஸ் என்ன உச்சநீதிமன்றமா?
ஆர்.கே.நகரில் காவல்துறை ஏவல்துறை போல செயல்படுகிறது. காவல்துறையினர் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆர்.கே. நகருக்கு தர்மயுத்தம் துணை முதல்வர் வர்றாருன்னு விட்டு கொடுத்தேன் இதோட முடிந்து போயிரும்னு நினைச்சாங்களா? முதல்வர் என்ன உச்சநீதிமன்றமா? என்று கேட்டார் தினகரன்.

ஒழுங்கா தேர்தல் நடக்கணும்
நாங்க 30 வருஷமா பாத்திருக்கோம். தேர்தல் ஒழுங்கா நடக்கணும்னு நினைக்கிறோம். அவங்களுக்கு கூட்டம் வரலைன்னு இப்படி செய்வதா? சுயேட்சை ஜெயிக்கணும்னு வர்றாங்க. நாங்க பணம் கொடுத்து கூப்பிடலை. காவல்துறையை வைத்து மிரட்டு கின்றனர்.

நான் ஜெயித்து விடுவேன் என்ற பயம்
போலீசை விட்டு எங்க ஆட்களை மிரட்டுகின்றனர். மற்ற காவல்துறை அதிகாரிக்கு நடந்ததை நினைத்து பார்க்க வேண்டும். தவறான அரசு நடக்கிறது. அதிகாரிகள் தவறாக நடந்து கொள்கின்றனர். அதிகாரிகள் கடமையை மட்டும் செய்யுங்க. மதுசூதனுக்கு ஓட்டு கேட்பது போல வரக்கூடாது. நாங்க இதுக்கெல்லாம் பயப்பட மாட்டோம் என்று தினகரன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications