டோர்னியர் விமானிகளின் பேச்சு அடங்கிய கருவி பழுது... விபத்துக்கான காரணம் அறிவதில் சிக்கல்
சென்னை: கடலில் விழுந்து விபத்துக்குள்ளான, டோர்னியர் விமானத்தில் இருந்த விமானிகளின் உரையாடல்கள் பதிவான கருவி பழுதடைந்து விட்டதால், அதில் இருந்த தகவல்களை பெற முடியவில்லை' என, மத்திய அரசு நிறுவனம் கைவிரித்துள்ளது.
சென்னையில் இருந்து, ஜூன், 8ம் தேதி புறப்பட்ட, கடலோர காவல் படையின், 'டார்னியர்' ரக விமானம், பிச்சாவரம் அருகே, கடலில் விழுந்து மூழ்கியது. அதில் பயணம் செய்த, மூன்று விமானிகளும் உயிரிழந்தனர்.

அவர்களின் உடல்களை தேடும் போது, விமானத்தின் கருப்பு பெட்டி மற்றும் விமானிகள் அறை பேச்சு கருவியான, 'காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர்' ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
இதில், கருப்பு பெட்டி அமெரிக்காவுக்கும், 'காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர்' கருவி, ஐதராபாத்தில் உள்ள மத்திய மின்னணு நிறுவனத்துக்கும் அனுப்பப்பட்டன. அதன் முடிவுகளுக்காக, கடலோர காவல் படையினர் காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து, கடலோர காவல் படை (கிழக்கு) கமாண்டன்ட் எஸ்.பி.சர்மா, நேற்று கூறியதாவது...
கருப்பு பெட்டியை, அதை தயாரித்த அமெரிக்க நிறுவனத்திற்கு ஆய்வுக்காக அனுப்பியிருந்தோம். அது, சில தினங்களுக்கு முன் சென்னைக்கு வந்தது. பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தில், இரவும், பகலுமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன் மூலம், விமானத்தில் என்ன கோளாறு ஏற்பட்டது என்பது விரைவில் வெளிவரும்.
அதே நேரத்தில், 'காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர்' கருவியில் பதிவான தகவல்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதை தயாரித்த ஐதராபாத்தில் உள்ள மத்திய மின்னணு நிறுவனம், 'கருவியில் இருந்த சர்க்கியூட்கள் பழுதடைந்துவிட்டதாகவும், எனவே, அதிலிருந்த தகவல்களை கண்டுபிடிக்க இயலவில்லை' எனவும், தெரிவித்துவிட்டது.
இதனால், கடைசி நேரத்தில், விமானத்தில், விமானிகள் என்ன பேசினர் என்பதை அறிய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications