வருது.... வருது.... இரட்டை இலை தீர்ப்பு! அடுத்து அடுத்து... பரபரக்கும் அதிமுக கோஷ்டிகள்
தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்களை நிர்ணயிக்கப்போவதுதான் இன்றைய தேர்தல் ஆணையத்தின் இரட்டை இலை குறித்த உத்தரவு.
சென்னை: இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம் என்ற விவகாகரத்தில் மத்திய தேர்தல் கமிஷன் இன்று தனது முடிவை அறிவிக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுவதால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தில் இன்று சசிகலா தரப்பு மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆகிய இரண்டுமே, தங்களது வாதங்களை முன்வைக்க உள்ளன. ஆவணங்களை சமர்ப்பிக்க உள்ளன. கிட்டத்தட்ட நீதிமன்றத்தில் வாத-விவாதங்கள் நடைபெறுவதை போன்றே இங்கும் நடைபெறும்.

சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதில் தவறில்லை, அவரது அணிக்குத்தான் இரட்டை இலை என்று ஒரு வேளை தீர்ப்பு வந்தால் இதுதான் நடக்கும்:
*சேவல் சின்னத்தை கேட்டு பெற ஓ.பி.எஸ் அணி முயற்சி செய்யும்.
*ஓ.பி.எஸ் அணியிலிருந்து பலரும் சசிகலா அணிக்கு தாவ முயலலாம்.
*இரட்டை இலை சின்னத்தை கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவது குறித்து பரிசீலிக்கலாம்
*ஓ.பி.எஸ் புதுக்கட்சி ஆரம்பிப்பதாக அறிவிக்கலாம்.
*ஒருவேளை, ஓ.பி.எஸ் கண்கள் பனித்து, இதயம் கனிந்து சசிகலா அணியோடும் சேரலாம்.
*பாஜக போன்ற கட்சியில் ஓ.பி.எஸ் மற்றும் ஆதரவாளர்கள் இணையலாம்.
அதேநேரம், ஓ.பி.எஸ் அணிக்குத்தான் இரட்டை இலை என்று தீர்ப்பு வந்தால், சசிகலா அணி வேறு சின்னத்திற்கு போராடும் வாய்ப்பு குறைவு. கோர்ட் மூலம் இரட்டை இலை சின்னத்தை பெறவே முயற்சி செய்யும் என எதிர்பார்க்கலாம். ஆனால் அதற்குள்ளாக தமிழக அரசியலே தலைகீழாக மாறிவிடும்.
ஓ.பி.எஸ் அணியிடம் கட்சி வந்துவிட்டால் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் அவரை அன்போடு 'அண்ணன் ஓ.பி.எஸ்' என வாய் நிறைய அழைப்பதை தமிழகம் பார்க்க முடியும். ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள ஓ.பி.எஸ்சுடன் இணைந்து செயல்படவே எம்.எல்.ஏக்கள் விரும்புவார்கள். பன்னீர்செல்வமே மீண்டும் முதல்வராக வாய்ப்பு ஏற்படும்.
டிடிவிதினகரன், சசிகலா போன்றோரின் அரசியல் எதிர்காலம் முழுமையாக இருளடைந்து, தமிழக அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்கள். தீபாவுக்கான அரசியல் இடம் தமிழகத்தில் மாயமாகும். மீண்டும் திமுகvsஅதிமுக என்ற அளவில் தமிழக அரசியல் முன்நகரும். உதிரி கட்சிகள், புதிய கட்சிகள் ஆட்டம் குறையும். பாஜகவோடு உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இப்படி அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்களை நிர்ணயிக்கப்போவதுதான் இன்றைய தேர்தல் ஆணைய உத்தரவு.












Click it and Unblock the Notifications