எங்களிடம் ஆட்சியை கொடுங்கள்.. ஒரே வாரத்தில் ஓஎன்ஜிசியை விரட்டுவோம்.. அன்புமணி ஆவேசம்
பாமகவிடம் ஆட்சியைக் கொடுத்தால் ஒரே வாரத்தில் கதிராமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசியை துரத்திவிடுவதாக பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
கும்பகோணம்: ஒஎன்ஜிசிக்கு எதிராக கதிராமங்கலத்தில் நடைபெற்று வரும் போராட்டக் களத்திற்கு இன்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
காவிரியில் 5 கி.மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டவேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். மேகதாது பகுதியில் அணைகட்ட கூடாது. கர்நாடக கழிவுகளை காவிரியில் கலக்க விடக் கூடாது.
மணல் கொள்ளையை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். காவிரி பகுதியை பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்துக் கடந்த 28 ம்தேதி தர்மபுரியில் இருந்து பூம்புகார் வரை மூன்று நாள் பிரச்சார பேரணியாகப் புறப்பட்டார் அன்புமணி.
இதனைத் தொடர்ந்து இன்று கும்பகோணத்தில் தனது பேரணியை முடித்துக் கொண்ட அன்புமணி நேராக கதிராமங்கலத்திற்கு சென்றார். அங்குப் போராட்டக்காரர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, இந்தப் போராட்டம் பெண்கள் முன்னெடுத்திருக்கும் போராட்டம் என்றும் இது கதிராமங்கலம் கிராமத்துப் பிரச்சினையை உலக அளவில் கொண்டு சென்றிருக்கிறது என்றும் அன்புமணி கூறினார்.
மேலும் அவ்வளவு பெருமையும் பெண்களையேப் போய் சேரும் என்றும் கதிராமங்கலத்தின் மக்கள் போல் தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் கிளர்ந்தெழுந்து போராடினால் காவிரி பிரச்சனை பறந்து போய்விடும் என்று அன்புமணி தெரிவித்தார்.
மேலும், தங்களுடைய நோக்கம் கதிராமங்கலத்தில் இருந்து மட்டுமல்ல, தமிழகத்தை விட்டே ஒஎன்ஜிசியை விரட்டியடிக்க வேண்டும் என்பதுதான் என்று குறிப்பிட்ட அன்புமணி, அதற்கு தாங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்றும், வந்துவிட்டால் ஒரே வாரத்தில் ஓஎன்ஜிசி உரிமத்தை ரத்து செய்து விரட்டி அடித்து விடுவோம் என்றும் கூறினார்.
தமிழகத்தை இப்போது ஆண்டு கொண்டிருக்கும் அரசு அதைச் செய்யாது என்றும் அவர்கள் அனைவரும் மத்திய அரசிடம் கைக்கட்டி நிற்கிறார்கள் என்றும் அன்புமணி குற்றம்சாட்டினார்.