அப்துல்கலாம் மறைவிற்கு கவிதையால் இரங்கற்பா வடித்த டி.ராஜேந்தர்
சென்னை: நேற்று இரவு மறைந்த மக்களின் ஜனாதிபதி திரு அப்துல்கலாம் அவர்களுக்கு இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நேரில் செல்ல முடியாதவர்கள் பத்திரிக்கைகள், இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களின் மூலம் அப்துல்கலாம் அவர்களின் மரணத்திற்கு தங்களின் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அப்துல்கலாமின் மரணத்திற்கு காலையில் இருந்தே திரைத்துறையினர் தங்களின் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். தற்போது இயக்குநர் டி.ராஜேந்தரும் தனக்கே உரித்தான கவிதை வரிகளில் அடுக்கு மொழியைக் கலந்து, அறிவியல் விஞ்ஞானியின் மரணத்திற்கு இரங்கலைத் தெரிவித்து உள்ளார்.
அவரின் அடுக்கு மொழி இரங்கலைக் கீழே காணலாம்.
இந்திய விஞ்ஞான உலகின் விருட்சம் ஒன்று, வேரறுந்து வீழ்ந்து விட்டது
இளைஞர் சமுதாயத்திற்கு வழிகாட்டிய ஒளி விளக்கொன்று உடைந்து விட்டது
அறிவுப் பெட்டகத்தை சுமந்த அப்துல்கலாம் எனும் அற்புதக் கலம்
காலக் கடலில் தன் பயணத்தை நிறுத்தி விட்டது
நம்மையெல்லாம் கண்ணீர்க் கடலில் ஆழ்த்தி விட்டது
மேகாலயாவில் மாணவர்களிடையே பேசும்போது
மேல்வானின் கேக ஆலயா அவரை அழைத்து விட்டது
நம்மையெல்லாம் சோக ஆலயாவில் நுழைத்து விட்டது
சொல்லால் வேண்டுமானால் அவர் முன்னாள் ஜனாதிபதி
செயலால் இந்தியர்கள் இதயத்தில் என்றுமே அவர் அழியா அதிபதி
அவரது மறைவு இந்திய நாட்டிற்கே ஈடு கட்டமுடியாத ஒரு இழப்பு
குடியரசுத் தலைவராய் அவர் ஆற்றிய தொண்டு நம் நெஞ்சை விட்டு நீங்காது
காலம் உள்ளவரை அவர் புகழ் மங்காது!
மேற்கண்டவாறு தனது ஆழ்ந்த இரங்கல்களை கவிதையில் வடித்து வெளியிட்டிருக்கிறார், இயக்குநர் டி.ராஜேந்தர்.