"மாப்பிள்ளை ஓ. பன்னீர் ஸ்டாலின்" ... வெளுத்து வாங்கிய டாக்டர் நமது எம்ஜிஆர்!
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை டாக்டர் நமது எம்ஜிஆர் சாடியுள்ளது.
சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன் 'மாப்பிள்ளை' ஓபிஎஸ் கூட்டணி வைத்திருப்பதாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான டாக்டர் நமது எம்ஜிஆர் சாடியுள்ளது.
இது தொடர்பாக நமது எம்ஜிஆர் நாளேட்டில் எழுதப்பட்டுள்ளதாவது:
கருணைத் தாயாம் நம் அம்மாவை கொலைக் குற்றவாளி என்பதாக மு.க.ஸ்டாலின் பத்திரிகையாளர்களிடம் தரம் தாழ்ந்து விமர்சிக்க, அடுத்த வினாடியே அவர் வெட்கித் தலைகுனியும்வண்ணம் வெப்பம் தகிக்கும் பதிலடி அறிக்கை தந்ததுதோடு,அவர் தன் பண்பற்ற செயலுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கடும் கண்டனம் தெரிவித்ததும் நம் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என்றால்...
"மாப்பிள்ளை பன்னீர்" என்று நம் அம்மாவின் துகில் இழுத்த துரியோதன-னால் வர்ணிக்கப்பட்ட பச்சை துரோகியோ, 48 மணி நேரம் கழித்து மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் என்பதாக மெல்லிய மயிலிறகால் வருடிவிடும் வார்த்தைகளால் ஒப்புக்கு ஓர் அறிக்கை விட்டார்.
உடனே, மு.க.-ஸ்டாலினும், பன்னீருக்கு கண்டன அறிக்கை என்ற பேரிலே புனுகு பூசும் விதத்தில் ஒரு ஒத்தட அறிக்கையை வெளியிட்டு, தி.மு.க. மற்றும் ஒ.ப.தி.மு.க. இடையே உள்ள அந்தரங்க உறவுக்கு பங்கம் வராமல் இரு தரப்பும் நாடகமாடியிருக்கிறது.
கண்டுகொள்ளலையே...
சட்டமன்றத்தில் தி.மு.க. நடத்திய ரவுடித்தனத்தை கண்டிக்காதவர்... அம்மாவால் நியமிக்கப்பட்ட சட்டமன்ற சபாநாயகரின் சட்டையை பிடித்து இழுத்து அவமானப்படுத்தியதை கண்டுகொள்ளாதவர்..
பச்சைதுரோகி
அம்மாவை கொலைக்குற்றவாளி என்று விமர்சித்த மு.க.ஸ்டாலினுக்கு வேண்டா வெறுப்போடு ஒப்புக்கு ஓர் அறிக்கை விட்டு ஊரை ஏய்க்கப் பார்ப்பவர் ... தி.மு.க.வினருக்கு கழகத்தின் கரை வேட்டிகளை கட்டிவிட்டு, அம்மாவால் களமிறக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக பொதுமக்கள் போர்வையில் போராட்டம் என்பதாக தி.மு.க.வோடு கூடி அரசியல் மோசடியில் ஈடுபட்டு வரும் பச்சைத்துரோகி பன்னீரு...
பிரம்புக்கும் பாம்புக்கும் வலிக்காம..
பிரம்புக்கும் வலிக்காம, விஷப் பாம்புக்கும் வலிக்காம அடிப்பது போல் அடிப்பாராம், உடனே ஆரூரார் மைந்தன் வலிப்பதுபோல் துடிப்பாராம்...!
நடிப்பார்களே
அதுசரி, மக்களும் இதையெல்லாம் நம்புபவர்களாக நடிப்பதுபோல் நடிப்பார்கள்-தானே! போங்கடா போங்கடா போக்கத்த பசங்களா! உங்களின் திருட்டுக் கூட்டு தெருவுக்கு வந்து வெகுநாளாச்சேப்பு!
இவ்வாறு டாக்டர் நமது எம்ஜிஆர் நாளேடு எழுதியுள்ளது.