இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு - கி.வீரமணி அறிவிப்பு
சென்னை: தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுகவை ஆதரிப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டில், தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த முடிவைத் திராவிடர் கழகம் எடுத்ததோ, அந்த முடிவை மாற்றிக் கொள்ளவேண்டிய அளவுக்குப் பெரிய மாற்றம் ஏதும் தமிழ்நாட்டு ஆட்சியில் நடந்துவிடவில்லை.
இந்த சூழ்நிலையில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிடர் கழகம் திமுகவுக்கும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுக்கும் தன் ஆதரவைத் தெரிவித்திருந்தது. இடைத்தேர்தல் நடக்க இருக்கும் மூன்று தொகுதிகளிலும் திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களையே திராவிடர் கழகம் ஆதரிக்கும்.
தி.மு.க.வைப் பொருத்தவரையில் எதிர்க்கட்சி என்ற நிலையில், காவிரி நதி நீர் உரிமை பிரச்சனை உள்பட தமிழகத்தின் மிக முக்கியமான பிரச்சனைகள் அனைத்திலும் தனது கடமையினை சிறப்பாக ஆற்றிவரும் நிலையில், மூன்று தொகுதிகளிலும் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் தி.மு.க.வையே ஆதரிப்பது என்று முடிவு செய்வது ஜனநாயகம் காப்பதற்கே ஆகும். எனவே, தமிழக வாக்காளர்களும் தி.மு.க.வை வெற்றியடையச் செய்ய வேண்டுமாய்க் கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.