தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகள் தலையில் ரூ.58 ஆயிரம் கடன்! திராவிட கட்சிகள் மீது எச்.ராஜா பாய்ச்சல்
திண்டுக்கல்: 1967ல் இருந்து ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் தமிழகத்தை பின்னுக்கு தள்ளிவிட்டன என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
திண்டுக்கல்லில் நடந்த கட்சி நிர்வாகியின் இல்ல விழாவில் கலந்துகொள்வதற்காக வந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக-அ.தி.மு.க.வுக்கு மட்டுமே போட்டி நிலவுகிறது.

மற்ற கட்சியினர் காரில் கட்சி கொடி கட்டி வந்தால், எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். ஆனால், ஸ்ரீரங்கம் தொகுதியில் கட்சி கொடியுடன் ஆளுங்கட்சியினரின் 3 ஆயிரம் கார்கள் சுற்றி வருகின்றன. ஒவ்வொரு ‘பூத்'க்கும் வெளியூர் அ.தி.மு.க.வினர் சுமார் 100 பேர் முகாமிட்டுள்ளனர். தேர்தல் ஆணையம் 100 சதவீதம் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறது.
1967ல் இருந்து தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தமிழகத்தை பின்னுக்கு தள்ளிவிட்டன. தற்போது, தமிழக அரசுக்கு ரூ.4 லட்சம் கோடி கடன் சுமை உள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் தலையிலும் தலா ரூ.58 ஆயிரம் கடன் உள்ளது. இந்த பின்னடைவில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற, முன்னேற்ற பாதையில் செல்ல பாஜகவால் மட்டுமே முடியும்.
பாஜகவின் அடிப்படை கொள்கைகளோடு ஒத்துப்போகும் கட்சிகள் மட்டும் எங்களுடன் கூட்டணி வைத்தால் போதும். மற்றவர்கள் எங்களுக்கு தேவையில்லை. மாநில கட்சிகள் பாஜகவை கண்டு அச்சம் அடைந்துள்ளன. இலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தில் இருக்கும் இலங்கை அகதிகளை நாடு திரும்ப வைப்பது தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தை தமிழக முதல்வர் புறக்கணித்துவிட்டார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்க மத்திய அரசு சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி மதசார்பின்மை என்ற வார்த்தையை தவறாக பயன்படுத்தி வருகிறது. பாஜக எப்போதுமே கட்டாய மதமாற்றத்தை ஆதரிக்காது.இவ்வாறு எச்.ராஜா கூறினார்.












Click it and Unblock the Notifications