வெள்ளம் வந்தும் புத்தி வரலை... நிவாரணமாக வந்த பெட்ஷீட், வேட்டியையும் விற்றுக் குடிக்கும் கொடுமை!
சென்னை: வெள்ள நிவாரணமாக அரசு தந்த பொருட்களையும் விற்று, மது குடிக்கும் அளவிற்கு சிலர் மது அடிமையாக வாழ்ந்து வருகின்றனர் என்பதை டாஸ்மாக் கடைக்கு வெளியில் காணும் காட்சிகள் உறுதிபடுத்துகின்றன.
வெள்ளப் பாதிப்பிலிருந்து சென்னை மக்கள் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றனர். மழையால் பாதிக்கப்பட்ட பொருட்களைச் சுத்தம் செய்து மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், மழையோ, வெள்ளமோ எங்களை எதுவும் செய்து விட முடியாது என்பது போல் தங்கள் கடமையை செவ்வணே செய்து வருகின்றனர் ‘குடி'மகன்கள்.

அடை மழையிலும்...
ஆம், அடாது மழையிலும் விடாது குடித்து அவர்கள் சாதனை புரிந்தனர். அவர்களின் வசதிக்காகவே எவ்வித தங்கு தடையும் இன்றி சரக்குகள் கிடைக்க டாஸ்மாக்குகள் பெரும் துணை புரிந்தன.

அசராத டாஸ்மாக்...
எந்தப் பகுதியிலும் டாஸ்மாக்கிற்குள் தண்ணீர் புகுந்தது என்ற குற்றச்சாட்டே இல்லை. காரணம் அங்கு கடைகளில் இருந்த ‘தண்ணீர்' அனைத்தும் குடிமகன்களின் வயிற்றுக்குள் அல்லவா இருந்தது.

நிவாரணப் பொருட்கள்...
இந்நிலையில், வீடிழந்து உடமைகள் இழந்து வாடும் மக்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரணப் பொருட்கள் வந்த வண்ணம் உள்ளன. அவற்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வினியோகித்தும் வருகின்றனர்.

வருமானமில்லை...
ஆனால், மழை, வெள்ளம் காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல், வருமானத்திற்கு வழியில்லாமல் தவித்த மது பிரியர்கள், மது அருந்த முடியாமல் பணமின்றி தவித்து வந்தனர். எனவே, இந்த நிவாரணப் பொருட்களை விற்று அவற்றில் கிடைக்கும் பணத்தில் அவர்கள் குடிக்கத் தொடங்கியுள்ளனர்.

மலிவு விலையில் விற்பனை...
பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளின் வாசலிலேயே நிவாரணப் பொருட்களின் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. நிவாரணத்திற்காக கொடுக்கப்பட்ட பெட்ஷீட், துண்டு, வேட்டி போன்றவற்றை மலிவு விலையில் அவர்கள் விற்பதைக் காண முடிகிறது.












Click it and Unblock the Notifications