மெரினாவில் குட்டி விமானத்தைப் பறக்கவிட்ட சீன வாலிபர் விசாரணைக்குப்பின் விடுவிப்பு
சென்னை: சென்னை மெரினாவில் குட்டி விமானத்தை பறக்க விட்ட சீன வாலிபர் பிடிபட்டதுடன் குட்டி விமானமும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி. நகரில் உள்ள 10 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் குட்டி விமானம் விழுந்தது. கடந்த ஜனவரி மாதம் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த குட்டி விமானத்தை பறக்க விட்ட மைலாப்பூரைச் சேர்ந்த கிறிஸ்தவ பாடகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் போலீஸ் அனுமதி இல்லாமல் ஆள் இல்லாத கேமரா விமானங்களை பறக்க விட தடை விதிக்கப்படுவதாக போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் அறிவித்தார்.
கமிஷனர் ஜார்ஜின் இந்த அறிவிப்பை தொடர்ந்து சென்னையில் யார், யார் இதுபோன்ற விமானங்களை வைத்துள்ளனர் என்று போலீசார் கணக்கெடுத்தார்கள்.
நடிகர் பாண்டியராஜன் உள்ளிட்ட நிறைய பேர், இந்த குட்டி விமானங்களை போலீஸ் அனுமதி பெற்று வைத்துள்ளனர். போலீஸ் அனுமதி இல்லாமல் கேமரா விமானம் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் சென்னை மெரினா கடற்கரையில் விவேகானந்தர் இல்லம் எதிரே, வெளிநாட்டு வாலிபர் ஒருவர் குட்டி விமானத்தை வானத்தில் பறக்க விட்டு, மெரினா கடற்கரையை படம் பிடித்துக் கொண்டிருந்தார்.
இந்த தகவல் போலீசுக்கு கிடைத்தது. இதனையடுத்து போலீசார் குட்டி கேமரா விமானத்தை பறக்கவிட்ட சீன வாலிபரை மடக்கிப் பிடித்தனர்.
ரிமோட் மூலம் வானத்தில் பறந்த கேமரா விமானம் கீழே இறக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பேட்டரியில் இயங்கக்கூடிய அந்த விமானம் சீனாவில் இருந்து வாங்கி வரப்பட்டது ஆகும்.
அந்த விமானத்தை பறக்க விட்ட சீன வாலிபரின் பெயர் சுகியாங். பட்டதாரியான இவர் கடந்த ஒரு மாதமாக சென்னையை அடுத்த ஒரகடத்தில் உள்ள எலக்ட்ரானிக் கம்பெனியில் வர்த்தக மேலாளராக வேலை பார்த்தார். கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கி உள்ளார்.
அவர் பாஸ்போர்ட்டு, விசா போன்ற ஆவணங்களை சரியாக வைத்துள்ளார். ஆள் இல்லாத குட்டி கேமரா விமானங்களை போலீஸ் அனுமதி இல்லாமல் பறக்க விடக் கூடாது என்ற விஷயம் தனக்கு தெரியாது என்று அவர் போலீஸ் விசாரணையில் தெரிவித்தார்.
அவர் குட்டி விமானத்தில் உள்ள கேமராவில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு சீன வாலிபர் சுகியாங் விடுவிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications