சென்னையில் மீண்டும் ஒரு குடிபோதை கார் விபத்து- ஆட்டோ டிரைவர் பலி
சென்னையில் நள்ளிரவில் குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார்.
சென்னை: குடிபோதையில் வேகமாக வந்த கார் முன்னால் சென்ற ஆட்டோ மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே ஆட்டோ டிரைவர் பலியானார். மது போதையில் கார் ஓட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
உயிரிழந்த நபரின் பெயர் லட்சுமணன், 45, ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். கானகம் பகுதியின் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 6வது பிளாக்கில் வசித்து வருகிறார். திங்கட்கிழமையன்று இரவு டைடல் பார்க்கில் இருந்து பெண் பயணியை ஏற்றிக்கொண்டு ராஜீவ் காந்தி சாலையில் மத்திய கைலாஷ் நோக்கிச் சென்றார்.

தனியார் மருத்துவமனை அருகே சென்றபோது, பின்னால் வேகமாக வந்த கார் ஆட்டோ மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த லட்சுமணன், சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லட்சுமணன் சடலத்தை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்தியவர்களில் 3 பேர் தப்பியோடி விட்டனர். ஒருவரை கைது செய்தனர். குடி போதையில் காரை ஓட்டிய நபரின் பெயர் இளையராஜா என்று தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் நண்பர்களுடன் சேர்ந்து மது விருந்து முடித்து விட்டு திரும்பி வந்த போது ஆட்டோ மீது மோதி விட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து இளையராஜாவை கைது செய்து அடையாறு போலீசார் விசாரிக்கின்றனர். தப்பியோடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையில் குடி போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர். தரமணியில் ஆடி கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா முதல், நடிகர் அருண் விஜய், போர்சே காரை குடிபோதையில் ஓட்டி வந்து டிரைவர் உயிரை பறித்த விகாஷ் வரை இப்போது ஜாமீனில் வெளியே சுற்றிக்கொண்டுள்ளனர். அதே நேரத்தில் விபத்தில் பலியானவர்களின் குடும்பம்தான் ஆதரவற்ற நிலையில் நிற்கிறது என்பதுதான் சோகம்.












Click it and Unblock the Notifications