செம போதையில் பஸ்ஸை மறித்து கலாட்டா! சமாதானம் பேசிய போலீஸிடம் தலைவலிக்காத குவார்ட்டர் கேட்ட பெண்
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் குடிபோதையில் பெண் ஒருவர் சாலையில் சென்ற பேருந்துகள், வாகனங்களை வழிமறித்து அட்டகாசம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடி குடியை கெடுக்கும்.. என எத்தனையோ டாஸ்மாக் மதுபாட்டில்களில் சிறிய எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளது. எனினும் அதை படித்துபார்த்துவிட்டு "ப்ச்சே" என கூறிவிட்டு குடிப்போரும் இருக்கிறார்கள்.
இன்றைய கலிகாலத்தில் ஆண், பெண், சிறுவர்கள், சிறுமிகள் என்ற வித்தியாசம் இல்லாமல் குடித்து வருகிறார்கள். இந்த குடியால் எத்தனையோ குற்றச்செயல்கள் ஈடுபட்டு வருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

டாஸ்மாக் கடைகள்: இதனால்தான் இந்த டாஸ்மாக் கடைகளை ஒழிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அவ்வப்போது குடிமகன்கள் குடித்துவிட்டு சாலையில் படுத்துக் கொண்டு அட்டகாசம் செய்வதும் அவர்களை போலீஸார் எச்சரிக்கை விடுத்து அனுப்புவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் சிலர் சாலையில் அதிகமாக வாகன போக்குவரத்து இருக்கும் போது குறுக்கே நெடுக்கே நடந்து தொல்லை செய்வர்.
வாகனங்கள் வழிமறித்த பெண்: அவர்களையும் போலீஸாரோ இல்லை பொதுமக்களோ அப்புறப்படுத்துவர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் திருப்பூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை முக்கிய சாலை என்பதால் எந்நேரமும் வாகன போக்குவரத்து இருக்கும். எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்த சாலையில் இன்று 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், வாகனங்களை வழிமறித்து வந்தார்.

டாஸ்மாக் கடைகள்: மேலும் அங்கிருந்த டாஸ்மாக் கடைக்கு வரும் குடிக்காரர்களையும் ஆபாச வார்த்தைகளால் வசைப்பாடினார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். விசாரணையில் அந்த பெண் மது குடித்திருந்ததும் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டுதான் போதை தலைகேறியதும் ரகளை செய்து வருவது தெரியவந்தது.
கார் சாவியை பறித்த பெண்: இதையடுத்து அந்த பெண் அந்த பகுதியில் இருந்த பேருந்தை வழிமறித்தார். அவ்வழியாக வந்த காரை வழிமறித்து சாவியை பறித்துக் கொண்டார். பின்னர் போலீஸார் வந்து பேசினாலும் அவர்களிடம் திமிறியப்படியே நடந்து கொண்டார். போலீஸார் அறிவுரை கூறிய போது எனக்கு இன்னொரு குவார்ட்டர் வாங்கிக் கொடுங்கள், நான் வருகிறேன் என்றார்.

குவார்ட்டர் கேட்ட பெண்: உடனே போலீஸார் அவரை சமாதானப்படுத்த சரி வாங்கித் தருகிறோம், வாகனங்களுக்கு வழி விட்டு ஓரமாக வாருங்கள் என்றனர். அப்போது அந்த பெண் எனக்கு தலைவலிக்காத குவார்ட்டராக வாங்கி வாருங்கள் என்றாராம். இதனால் அருகில் இருந்தவர்கள் சிரித்தனர். போலீஸார் விசாரணையில் அந்த பெண் திருப்பூர் கலைஞர் நகரை சேர்ந்த மகேஸ்வரி என்பதும் கணவர் இறந்துவிட்ட நிலையில் மதுவிற்கு அடிமையானதும் தெரியவந்தது.
அதிர்ச்சி: இந்த பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் சாலையில் படுத்துக் கொண்டு போதையில் கலாட்டா செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த பெண் ரகளை செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications