போதையில் சொந்த வீட்டையே கொளுத்திய விவசாயி – 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்
திட்டக்குடி: திட்டக்குடியில் விவசாயி ஒருவர் மூக்கு முட்ட குடித்துவிட்டு என்ன செய்கின்றோம் என்று தெரியாமல் சொந்த வீட்டையே கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அங்கு.
ராமநத்தம் அருகே பேரங்கியம் புதுக்காலனியை சேர்ந்தவர் பரமசிவம். 50 வயதான இவர் ஒரு விவசாயி.
குடிக்கு அடிமையான அவர் நேற்று இரவும் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். போதை தலைக் கேறிய நிலையில் இன்று அதிகாலை பரமசிவம் தனது கூரை வீட்டுக்கு தீ வைத்துவிட்டார்.
வீடு தீப்பற்றி எரியவே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பரமசிவத்தின் குடும்பத்தினர் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்து அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து தீயை அணைக்க முயன்றும் இயலவில்லை. இதையடுத்து இதுபற்றி திட்டக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் வீடு முற்றிலும் எரிந்து போனதால் வீட்டில் இருந்த ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.