தீ விபத்தில் நொறுங்கி விழுந்த சென்னை சில்க்ஸ் - 2வது நாளாக தி.நகர் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பெருந்தீவிபத்தில் சிக்கி கொழுந்துவிட்டு எரிந்து, கடைசியில் இடிந்து விழுந்தது சென்னை சில்க்ஸ் கட்டடம். இதன்காரணமாக 2வது நாளாக சென்னை தி.நகரின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போயுள்ளது.
சென்னை: தீவிபத்தில் சிக்கி இடிந்து விழுந்து நொறுங்கியது சென்னை சில்க்ஸ் கட்டடம். இதனால் தி.நகர் மக்களின் இயல்பு வாழ்க்கை இரண்டாவது நாளாக முடங்கிப்போயுள்ளது.
நேற்று அதிகாலை 4 மணிக்கு ஏற்பட்ட திடீர் தீவிபத்து, காலை 7 மணிக்குப் பிறகே சென்னை மக்களுக்கும் மாநிலத்தின் பிற பகுதியினருக்கும் தெரியவந்தது. முதலில் சாதாரண தீ விபத்து போலத்தான் கருதப்பட்டது.
ஆனால் இரண்டாவது நாளாகவும் தீ கொழுந்துவிட்டு எரிந்து வருவதை யாரும் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள் தி.நகர் வாசிகள்.
பயங்கரமான புகையால் மூச்சுதிணறல், நெஞ்செரிச்சலால் இரண்டாவது நாளாகவும் தி.நகர் வாசிகள் அவதிப்படுகிறார்கள். இந்த நிலையில், வெப்பம் தாங்க முடியாமல் கட்டடத்தின் 4 தளங்கள் இன்று அதிகாலை 3.19 மணிக்கு இடிந்து விழுந்துள்ளன. மேலும் மீதமுள்ள தளங்களும் முற்றிலும் இடிந்து விழும் ஆபத்து உள்ளது.

போக்குவரத்து துண்டிப்பு
உஸ்மான் சாலையில் உள்ள மேம்பாலத்தில் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. பாலத்தின் இரண்டுபக்கமும் பேரிகார்டர் போட்டு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இரவு பகலாக பாதுகாப்பு
தீ விபத்தில் சிக்கிய சென்னை சில்க்ஸ் பகுதியில் 100 மீட்டர் சுற்றளவுக்கு யாரையும் அனுமதிக்காமல் போலீசார் தீவிர கண்காணிப்பு பாதுகாப்புப் பணியில் இருக்கிறார்கள். 100க்கும் மேற்பட்ட போலீசார் இரவு பகலாக பணியில் இருக்கிறார்கள்.

மொட்டைமாடியில் வேடிக்கை பார்க்க வேண்டாம்
சென்னை சில்க்ஸ் அமைந்துள்ள பகுதியைச் சுற்றி வசிக்கும் மக்கள் தங்களது வீடுகளின் மொட்டை மாடியில் நின்று வேடிக்கை பார்ப்பதை தவிர்க்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான துணிமணிகளும், தங்க வைர நகைகளும் எரிந்து கருகிப்போனதாக தெரிகிறது.

உயிரிழப்பு உள்ளதா?
கடையில் 7வது தளத்தில் இருந்த ஊழியர்கள் 12 பேர் உயிரோடு மீட்கப்பட்டனர் என்று செய்திகள் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் ஊழியர்கள் தீயில் சிக்கி கருகினாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் மற்ற ஊழியர்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.

வழக்குப்பதிவு
சென்னை சில்க்ஸ் தீவிபத்து தொடர்பாக சென்னை மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகிறார்கள். மேலாளர் ரவீந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளார்கள்.

பாலத்தின் மீது இடிந்து விழும் அபாயம்
சென்னை சில்க்ஸ் கட்டடம் எதிரில் உள்ள பாலத்தின் மீது இடிந்து விழும் அபாயம் உள்ளதால் பாலத்தில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.பாலத்தின் மீது கட்டடம் விழுந்தால் பெரிய அளவுக்கு சேதம் ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications