திகிலில் உறைந்துள்ள தி. நகர்... போக்குவரத்து நிறுத்தம் மின்சாரம் துண்டிப்பு
சென்னை சில்க்ஸ் தீவிபத்தால் தி.நகரில் உஸ்மான் சாலையில் போக்குவரத்துக்கு நிறுத்தப்பட்டுள்ளது. அந்தப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தி.நகரில் ஏற்பட்ட பதற்றம் தணியவில்லை.
சென்னை: பிரபல துணிக்கடையான சென்னை சில்க்ஸ், ஸ்ரீ குமரன் தங்க மாளிகை கடைகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீவிபத்து சென்னை வாசிகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இன்று அதிகாலை 4 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்து பல மணி நேரமாகியும் அணைக்கப்படவில்லை என்பதால் தி.நகர் வாசிகள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில், தீவிபத்தால் உஸ்மான் சாலையில் புகை மூட்டம் அதிகரித்தவண்ணம் உள்ளது.

மேலும் தி.நகர் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஏரளாமான கடைகள் மூடப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட பெரிய கடைகள் உஸ்மான் சாலையில் மூடப்பட்டுள்ளன. மேலும் நல்லி சில்க்ஸ் உள்ளிட்ட பெரிய கடைகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
தீவிபத்தால் சென்னை சில்க்ஸ் கடையின் இரண்டாவது மாடியில் சுவர் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் கட்டடத்தின் உள்ளே தீ பயங்கரமாக எரிவதால், கட்டடத்தின் உட்புற சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன.
வெளிப்புறச் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டடம் இடிந்து விழும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் புகை மூட்டம் சென்னை சில்க்ஸ் அருகில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications