ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு.. அருவியில் குளிக்க, பரிசல் இயக்க தடை
தருமபுரி: தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மெயின் அருவியில் குளிக்க, பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான சாம்ராஜ் நகர், மாண்டியா, கொள்ளே கால், அஞ்சிப்பாறை, ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
இதனால் காவிரியில் நேற்று முன்தினம் வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மெயின் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது

வழக்கமாக 25 ஆயிரம் கனஅடி அளவிற்கு தண்ணீர் வரும் போது மட்டுமே தடை விதிக்கப்படும். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் தற்போதே தடை விதித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஏமாற்ற்றம் அடைந்துள்ளனர்.
இதேபோல் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணையில் விநாடிக்கு 5,386 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 13,956 கன அடியாக அதிகரித்தது. காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. கால்வாய் பாசன பகுதிகளில் மழை குறைந்ததால் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நீர் திறப்பை விட, வரத்து அதிகளவில் உள்ளதால், நீர்மட்டம் தொடரந்து உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 63.54 அடியாக இருந்த நீர் மட்டம், நேற்று 64.91 அடியாக உயர்ந்தது. ஒரேநாளில் 1.40 அடி அளவிற்கு உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications