சென்னைவாசிகளே, இனி பொது இடங்களில் பிளாஸ்டிக் கழிவை கொட்டினால் ரூ.25,000 அபராதம்
சென்னை: சென்னையில் பொது இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டினால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சிங்கார சென்னையை சுத்தமான சென்னையாக ஆக்க மாநாகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குப்பைகளை மக்கும், மக்காத தன்மை என பிரித்து சேகரிக்கப்படுகிறது. மக்காத குப்பைகளை சேகரிக்க மாநகரில் உள்ள 200 வார்டுகளிலும் 200 மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பொது இடங்களில் குப்பையை கொட்டுவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது.

இருப்பினும் மக்கள் பொது இடங்களில் மக்காத குப்பையான பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுகிறார்கள். இதனால் நகரம் அசுத்தமாகிறது. சாக்கடை கால்வாய், மழை நீர் கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைப்பு ஏற்படுகிறது. மேலும் கூவம் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் மலை போல் குவிந்து கிடக்கின்றது.
இந்நிலையில் பொது இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது பொது இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை முதல் முறை கொட்டுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி இரண்டாவது முறை சிக்கினால் ரூ.10 ஆயிரமும், 3வது முறை சிக்கினால் ரூ.25 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
ரயில் நிலையம், கோவில்கள், கடைத்தெருக்கள், தனியார் அலுவலகங்கள், பொழுதுபோக்கு மையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையங்களை அமைக்க சென்னை மாநகராட்சி தீர்மானித்துள்ளது.












Click it and Unblock the Notifications