இடைத்தேர்தல் ரத்து தமிழகத்திற்கு தலைகுனிவு- எடப்பாடி அரசு ராஜினாமா செய்ய வேண்டும் - துரைமுருகன்
இடைத்தேர்தல் ரத்து அறிவிப்பு தமிழகத்திற்கு தலைகுனிவு, மானமுள்ள அரசு என்றால் ராஜினாமா செய்ய வேண்டும் என துரைமுருகன் கூறியுள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டு அதனால் தேசிய அளவில் தமிழகத்திற்கு ஏற்பட்ட தலைகுனிவிற்கு ஆளுங்கட்சியே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். மானமுள்ள அரசு என்றால் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தல் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் வந்ததை அடுத்து தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நூதன முறையில் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணம், பரிசு பட்டுவாடா
செல்போன்கள், குத்து விளக்குகளை மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இவை இல்லாமல் மொபைலுக்கு ரீசார்ஜ் செய்வது, பால், மளிகை பொருட்களை அரசியல் கட்சிகள் தங்களின் கணக்கில் வாங்கித்தருவது என பெரிய அளவில் பணம் புழங்கியுள்ளது. இடைத்தேர்தலை கண்காணிக்க பலர் இருந்தும் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை என்று தேர்தல் ஆணையம் வேதனை தெரிவித்துள்ளது.
தேர்தல் ரத்து
பணம் மற்றும் பரிசுப்பொருள் தருவதை எவ்வளவு தடுத்தாலும், நூதன முறையில் வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் பணம் மற்றும் பரிசுகளை பட்டுவாடா செய்ததாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. நேர்மையான சூழல் மாறும் வரை தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.
தலைகுனிவு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து திமுக மூத்த தலைவரும், கட்சியின் முதன்மை செயலாளருமான துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டு அதனால் தேசிய அளவில் தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
ராஜினாமா செய்க
இந்த தலைகுனிவுக்கு ஆளுங்கட்சியே காரணம் என குற்றம்சாட்டியுள்ள துரைமுருகன், மானமுள்ள அரசு என்றால் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது மிகப்பெரிய களங்கம். நியாயமாக அமைச்சர்கள் ராஜினாமா செய்யவேண்டும், இது தன்னுடைய சொந்த கருத்து என்றும் துரைமுருகன் கூறியுள்ளார்.
பணப்பட்டுவாடா
அரசாங்கமே பணப்பட்டுவாடா செய்துள்ளது தெரியவந்துள்ளது. இனிமேல் பணநடமாட்டம் இல்லாமல் எப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்யவேண்டும். அதுதான் நாட்டிற்கு நல்லது என்றும் துரைமுருகன் கூறியுள்ளார்.