துரை வைகோவின் ஒன்றரை ஆண்டு முயற்சி! கை மேல் கிடைத்த பலன்! துபாயிலிருந்து வந்த ரூ.41 லட்சம் இழப்பீடு!
சிவகாசியை சேர்ந்த மதிமுக தொண்டர் குடும்பத்துக்கு துபாயில் இழப்பீடு பெற்றுத்தந்த துரை வைகோ.
தென்காசி: துரை வைகோ முன்னெடுத்த ஒன்றரை ஆண்டுகால இடைவிடாத முயற்சியால் மதிமுக தொண்டர் ஒருவரது குடும்பத்திற்கு துபாயிலிருந்து ரூ.41 லட்சம் இழப்பீடு கிடைத்திருக்கிறது.
கோரிக்கை கடிதத்தை வாங்கினோம், அதிகாரிகளுக்கு ஃபார்வார்டு செய்தோம் என்றில்லாமல் தொடர்ந்து தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி கவனம் ஈர்த்திருக்கிறார் துரை வைகோ.
இதனிடையே துபாயிலிருந்து இழப்பீடு தொகை கிடைத்ததை அடுத்து துரை வைகோவை நேரில் சந்தித்து பயன் பெற்ற குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
இதனிடையே இதன் முழு பின்னணியை துரை வைகோவே தனது பதிவில் தெரிவித்திருக்கிறார். அதன் விவரம் வருமாறு;

2017ல் உயிரிழப்பு
''சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த கழகத் தோழர் சேதுராஜ் (இயற்பெயர் சேதுராமன்) அவர்கள் துபாயில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு அவர் பணியாற்றிய இடத்தில் நடந்த விபத்தில் எதிர்பாராத விதமாக இறந்துபோனார். அவர் பணியாற்றிய நிறுவனத்திடம் இருந்து நஷ்ட ஈடு பெற்றுத்தர உதவிட வேண்டும் என, கடந்த 2021 ஆண்டு நவம்பர் மாதத்தில் மறைந்த சேதுராஜ் அவர்களின் மனைவி, மகள் மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் கலிங்கப்பட்டி இல்லத்தில் என்னை சந்தித்து கோரிக்கை வைத்தார்கள்.''

ரூ.41 லட்சம் இழப்பீடு
''நாம் உரிய முயற்சிகளை மேற்கொண்டதன் அடிப்படையில் தற்போது நஷ்ட ஈடாக 41 இலட்சம் ரூபாய் அந்தக் குடும்பத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது.
அதற்கு நன்றி தெரிவிப்பதற்காக, மறைந்த சேதுராஜ் அவர்களின் மனைவி, மகள் மற்றும் அவருடைய மாமனார் ஆகியோர் கலிங்கப்பட்டி இல்லத்திற்கு இன்று வருகை தந்தார்கள். உங்கள் உதவிக்கு மிக்க நன்றி என அவர்கள் தெரிவித்தார்கள்.நன்றி எல்லாம் தெரிவிக்காதீர்கள். கழகத் தோழர் சேதுராஜ் அவர்களின் குடும்பத்திற்கு உதவுவது என் கடமை என அவர்களிடம் தெரிவித்தேன்.''

துரை வைகோவுக்கு நன்றி
''இந்த சந்திப்பின் போது இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களும் இருந்தார்கள்.சேதுராஜ் அவர்களின் குடும்பத்திற்கு உரிய நஷ்ட ஈடு கிடைக்க உதவிய KNA அமைப்பு, அதன் நிர்வாகிகள் பாலகிருஷ்ணன் சுப்பராஜ், ராஜாராம், ராகவன், வழக்காடிய வழக்கறிஞர் அர்ச்சனா, கழகத் தோழர்கள் மால்குடி ராஜா, துரை மோகன்ராஜ் மற்றும் இதற்கு யாரெல்லாம் உறுதுணையாகவும், உதவியாகவும் இருந்தார்களோ அவர்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.''

மனிதநேயம்
''சாதி, மத, அரசியல் எல்லைகளை கடந்து மனிதநேயத்தால் ஒன்றிணைவதும், துயரப்படுபவர்களுக்கு உதவி செய்வதுமே பொதுவாழ்வின் இலக்கணம்.''இவ்வாறு துரை வைகோ தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications