மேடையில் துரைமுருகன் அழ, அவரைப் பார்த்து திமுகவினர் அழ: அழுகாட்சியாகிப் போன கூட்டம்
வேலூர்: காட்பாடியில் நடந்த திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மேடையில் அழ அவரைப் பார்த்து கட்சியினர் அழ என அந்த இடமே கண்ணீர்மயமாகிவிட்டது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில்,

பதவிக்காக இல்லை
நான் எம்.எல்.ஏ. பதவிக்காக தேர்தலில் போட்டியிடவில்லை. நான் எம்.எல்.ஏ., அமைச்சர், எதிர்கட்சி உறுப்பினர் என அனைத்து பதவிகளிலும் சட்டசபையில் இருந்துள்ளேன். முதல்வர் மற்றும் எதிர்கட்சி தலைவர் பதவிகளை மட்டும் தான் நான் இன்னும் வகிக்கவில்லை.

கோஷ்டிகள்
எனக்கு கோஷ்டிகள் எதுவும் கிடையாது. அப்படி இருக்கையில் இங்கு 2 பேர் அடித்துக் கொண்டனர். என்னை திட்டினார்கள். அதை எல்லாம் நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நம்மை படைத்த கடவுளையே திட்டுகிறோம்.

வேட்பாளர் தேர்வு
திமுக வேட்பாளர்களை தேர்வு செய்து கருணாநிதி மற்றும் ஸ்டாலின். நான் அவர்கள் அருகே நின்று கொண்டு ஒத்து ஊதுபவன். அவ்வளவு தான். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்னை திட்டி என் கொடும்பாவியை எரித்தார்கள்.

கொளுத்துங்கள்
என் கொடும்பாவி எரிக்கப்பட்டது குறித்து அறிந்த கருணாநிதி உனக்கு திருஷ்டி கழிந்துவிட்டது என்று என்னிடம் தெரிவித்தார். கொடும்பாவியை ஏன் கொளுத்துகிறீர்கள்? என்னையே கொளுத்துங்கள். நான் கவலைப்பட மாட்டேன்.

கவலை இல்லை
அன்று என்னை ஒழிக என்று கூறியவர்கள் எல்லாம் இன்று வாழ்க என வாழ்த்துகிறார்கள். எனக்காக போஸ்டர் ஒட்டும் கட்சிக்காரன் என்னை திட்டக் கூடாதா? அதற்காக கவலைப்படவில்லை.

கண்ணீர்
அனைவருக்கும் வரும் முடிவு எனக்கும் ஒரு நாள் வரும். என்னை தூக்கிக் கொண்டு செல்கையில் நீங்கள் நான் செய்ததை நினைத்து கண்ணீர்வடிப்பது போதும் எனக்கு என்று கூறி துரைமுருகன் விம்மி அழுதார். அவர் அழுததை பார்த்த திமுகவினர் அழுதனர். கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் அழுகையுடன் கிளம்பிச் சென்றனர்.












Click it and Unblock the Notifications