சென்னை எஸ்பிஐ வங்கி முற்றுகை- திருவோடு கொடுக்கும் போராட்டம் நடத்தியவர்கள் கைது
சென்னையில் எஸ்பிஐ வங்கியை முற்றுகையிட்டு மேனேஜரிடம் திருவோடு கொடுத்து போராட்டம் நடத்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை : விஜய் மல்லய்யாவின் கடன்களை தள்ளுபடி செய்த எஸ்பிஐ வங்கி மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்யக்கோரி சென்னை கீழ்பாக்கம் எஸ்பிஐ வங்கி மேனேஜரிடம் திருவோடு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
பிரதமர் மோடி இந்தியாவில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்ததன் மூலம் கறுப்பு பணத்தை முற்றிலும் ஒழித்து விடுவதாக கூறி வருகிறார்.

கருப்பு பணம் ஒழிப்பு என்று கூறும் பிரதமர் மோடி முதலாளிகளின் கடனை தள்ளுபடி செய்வதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர். மத்திய அரசையும் எஸ்பிஐ வங்கி நிர்வாகத்தையும் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கடந்த சில தினங்களாக எஸ்பிஐ வங்கிக்கிளைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பெரும் முதலாளிகளின் கடன் 7200 கோடியை வசூல் செய்யவேண்டும் மேலும் மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்யவேண்டும் கோரிக்கையை மத்திய அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 2 தினங்களுக்கு முன்னர் தரமணியில் இருந்த எஸ்பிஐ வங்கிக்கிளை முன்பு போராட்டம் நடத்தினர்.

இரு தினங்களுக்கு முன்பு மதுரையிலும் எஸ்பிஐ வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர். இந்த நிலையில் இன்று கீழ்பாக்கத்தில் டெய்லர்ஸ் சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையை ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.

விஜய் மல்லையாவின் கடனைத் தள்ளுபடி செய்து விட்டதால் பாரத ஸ்டேட் வங்கி ஏழையாகி விட்டது. எனவே திருவோடு ஏந்தி பிச்சை எடுத்துப் பிழைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி போராட்டக்காரர்கள் மேனேஜருக்கு திருவோட்டினை கொடுத்தனர். உள்ளே புகுந்த போலீசார் அனைவரையும் இழுத்து அப்புறப்படுத்தினர். போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications