எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு- கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் கொண்டாட்டம்
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதால் கூவத்தூரில் அடைபட்டுள்ள எம்எல்ஏக்கள் கொண்டாட்ட மனநிலைக்கு மாறியுள்ளனர்.
சென்னை: அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதால் கூவத்தூரில் கடந்த 9 நாட்களாக அடைபட்டுள்ள எம்எல்ஏக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் ராஜினாமாவிற்குப் பிறகு கடந்த ஒருவாரகாலமாக தமிழக அரசியலில் குழப்பம் நீடித்து வருகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா முதல்வராக முடியாமல் போனது. இப்போது பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா.
சிறைக்கு செல்லும் முன் சசிகலாவால் அதிமுக சட்டசபைக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தன்னை சந்திக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். அவர் சட்டசபைக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் 3வது முறையாக சந்திக்கச் செல்கிறார்.
இதையடுத்து அவரை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுப்பார் என்று தெரிகிறது. இதனால் கூவத்தூரில் பெரும் கொண்டாட்டமான சூழ்நிலை நிலவுகிறது
9 நாட்களாக கூவத்தூரில் அடைபட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் இன்று முதலாவது தங்களுக்கு விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உற்சாக மனநிலைக்கு மாறியுள்ளனர். இன்று ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பாரா? என்பது இன்னும் சில நிமிடங்களில் தெரியவரும்.