மீண்டும் முதல்வராகும் ஜெ... தமிழக சட்டசபைக்கு முன்கூட்டி டிசம்பரிலேயே தேர்தல்?
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையாகி உள்ள அண்ணா தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அப்படி பொறுப்பேற்கும் நிலையில் விரைவில் தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாகவே கூறப்படுகிறது.
நாடே மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜெயலலிதா தாக்கல் செய்த சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி இன்று அதிரடியாகத் தீர்ப்பு வழங்கினார். ஜெயலலிதா உள்ளிட்டோரை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக நீதிபதி குமாரசாமி அறிவித்தார்.
நீதிபதி குமாரசாமியின் இந்த அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்க இருக்கிறார். அவர் முதல்வராக பதவியேற்க எந்தத் தடையும் தற்போது இல்லை.
மீண்டும் ஜெ. முதல்வர்
இதனால் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒன்று கூடி ஜெயலலிதாவை ஒருமனதாக முதல்வராக தேர்ந்தெடுத்து ஆளுநரிடம் கடிதம் கொடுப்பர். இதன் பின்னர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்பார்.
6 மாதத்துக்குள் எம்.எல்.ஏ.
அப்படி பதவியேற்கும் ஜெயலலிதா 6 மாத காலத்துக்குள் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதாவது வரும் அக்டோபருக்குள் எம்.எல்.ஏ.வாக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதற்காக ஒரு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
டிசம்பரில் பொதுத்தேர்தல்
அதே நேரத்தில் தமிழக சட்டசபையின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு மே மாதம் முடிவடைகிறது. இதனால் அக்டோபரில் ஒரு இடைத்தேர்தல், மே மாதத்தில் பொதுத்தேர்தல் என அடுத்தடுத்து தேர்தல் நடைபெறுவதற்கு பதிலாக ஒரேடியாக அக்டோபரில் சட்டசபை கலைக்கப்பட்டு டிசம்பரில் பொதுத்தேர்தல் நடத்த ஆளும் அதிமுக அரசு பரிந்துரைக்க வாய்ப்பிருக்கிறது.
ஆதரவு, அனுதாபம் .. அறுவடை
மேலும் தற்போது சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி இருப்பதால் மக்கள் மத்தியில் கிடைத்திருக்கும் ஆதரவு, அனுதாபம் அனைத்தையும் உடனடியாக அறுவடை செய்தால் அடுத்த ஆண்டுகாலம் ஆட்சியில் அண்ணா தி.மு.க.வே நீடிக்க முடியும் என்பதும் அக்கட்சி மேலிடத்தின் எண்ணமாக இருக்க முடியும்.
முன்கூட்டியே தேர்தல்..
இதனால் தமிழக சட்டசபையை 6 மாதத்துக்குப் பின் கலைத்துவிட்டு டிசம்பர் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடத்தப்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உண்டு என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்...
தேர்தல்..தேர்தல்.. வருதுங்கோ!!