தமிழகத்தில் போலி வாக்காளர்களை நீக்க 15-ந் தேதி முதல் நடவடிக்கை: தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி
சென்னை: தமிழகத்தில் பல லட்சம் போலி வாக்காளர்களை நீக்குவதற்காக வரும் 15-ந் தேதி முதல் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநில சட்டசபைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தலைமையிலான குழுவினர் தமிழகம் வருகை தந்தனர்.
சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி நேற்று மாவட்ட ஆட்சியர், போலீஸ் ஐ.ஜி., டி.ஐ.ஜி.கள், மாவட்ட போலீஸ் எஸ்.பிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் பார்வையற்றவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்வது எப்படி? வாக்களிப்பது எப்படி? என்பதை விளக்கும் பிரைலி எழுத்துக்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் நஜீம் ஜைதி கூறியதாவது:
தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் எந்த அளவில் செய்யப்பட்டுள்ளன என்பதை ஆய்வு செய்தோம். தேசிய மற்றும் மாநில அளவிலான அரசியல் கட்சிகளையும் சந்தித்துப் பேசினோம்.
அரசியல் கட்சிகள் சார்பில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்துவது பற்றி வலியுறுத்தப்பட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருக்கும் பெயர்கள், இறந்தவர்கள், இடம் மாறிச் சென்றவர்கள் ஆகியோரின் பெயர்களை நீக்குதல் போன்றவற்றுக்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

மாற்றுத் திறனாளிகள் தங்களின் பெயரை பதிவு செய்வதற்கான வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும், ஆன்லைன் பதிவு முறையை மேலும் பலப்படுத்த வேண்டும் என்று கோரி உள்ளனர்.
வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள், மது போன்றவற்றை வழங்குவதை தடுக்க வேண்டும். குறிப்பாக பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கு அனைத்து வகையிலும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாக்குப்பதிவுக்கு 3 நாட்களுக்கு முன்பே மது விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும். பணம் கொடுத்து சாதகமான தேர்தல் முடிவுகளை வெளியிடச் செய்யும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும். சமுதாயத்தில் பின் தங்கியுள்ள மக்கள், சுதந்திரமாக வாக்களிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்தையும் நாங்கள் கவனத்தில் கொண்டு உள்ளோம். அவற்றை படிப்படியாக செயல்படுத்துவோம்.
ஜனவரி 20-ந் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் 5 கோடியே 79 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலை சீரமைப்பதற்காக அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்கிறோம். வாக்காளர் பட்டியலை சிறப்பாக ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் 15-ந் தேதி தொடங்கி 29-ந் தேதிவரை நடைபெறும்.
இவ்வாறு நஜீம் ஜைதி கூறினார்.












Click it and Unblock the Notifications