விழுப்புரத்தில் தேமுதிக நிர்வாகி வீட்டில் பதுக்கி வைத்த சுவர் கடிகாரங்கள் பறிமுதல்
விழுப்புரம்: விழுப்புரத்தில் வாக்காளர்களுக்கு அளிக்க தேமுதிக நிர்வாகி ஒருவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுவர் கடிகாரங்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சட்டசபை தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க திமுக, பாஜக ஆகிய கட்சிகள் பெரு முயற்சி செய்தன. ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்தோ தனது கட்சி தனித்து போட்டியிடும் என்று அறிவித்தார்.

இருப்பினும் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் கூட்டணி குறித்து பேச வரலாம் என்று கூறியுள்ளார் பிரேமலதா. இந்நிலையில் தேமுதிக நிர்வாகி ஒருவர் தேர்தல் விதிமுறைகளை மீறி சிக்கியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் பகுதியில் தேர்தல் பறக்கும்படையினர், போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது தேமுதிக நிர்வாகி ஒருவரின் வீட்டில் விஜயகாந்தின் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட சுவர் கடிகாரங்கள் பெட்டி பெட்டியாக மறைத்து வைத்திருந்ததை அவர்கள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட தேமுதிக செயலாளர் உள்ளிட்ட சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications